வள்ளியூர், செப்.8 : திருநெல்வேலி மாவட்டத்தில் கூடங்குளம் பகுதியில் அமைந்துள்ள அணு உலையை எதிர்த்து நாளை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டக் குழு அறிவித்துள்ளது. மேலும், இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு உயிரிழப்பு ஏதும் நேரிட்டால், அவர்களது குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் போராட்டக் குழுவினர், கூடங்குளத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் தண்டோரா போட்டுள்ளனர்.
இந்த அறிவிப்பினைக் கேட்ட ஊர் மக்கள் பலர், கூடங்குளம் முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொள்ள ஆயத்தமாகி வருகின்றனர் என்று தெரிகிறது.
கூடங்குளத்துக்கு சாலை மார்க்கமாகச் செல்லும் பாதைகளை, போலீஸார் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து மூடி விட்டதால், கடல் மார்க்கமாக மட்டுமே கூடங்குளம் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பல்வேறு கிராம மக்களும் இன்றே படகுகள் மூலமாக கூடங்குளம் செல்வதற்குத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
கூடங்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஆயிரக்கணக்கான போலீஸார் அங்கே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினமே தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் வாகனங்களும், கண்ணீர் புகை வரவழைக்கும் கருவிகளும் கூடங்குளத்தைச் சுற்றி நிறுத்தப்பட்டுள்ளன. இவ்வகையில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நிகழாத வண்ணம் தடுக்கவும், போராட்டக்காரர்களை எதிர்கொள்ளவும் காவல்துறை தயாராக இருப்பதாகத் தெரிகிறது.