தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்துக்காக நடப்பாண்டில் ரூ.750 கோடி நிதியை முதல்வர் ஒதுக்கீடு செய்துள்ளார் என அமைச்சர் சுற்றுச்சுழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.
ஏழைப்பெண்களின் திருமணத்துக்கு தாலிக்கு தங்கம் மற்றும் உதவித்தொகை வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் தலைமையில் கடலூர் டவுன்ஹாலில் நடைபெற்றது. மாவட்ட சமூக நல அலுவலர் புவனேஸ்வரி வரவேற்று பேசினார்.
பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் உதவித்தொகையை வழங்கி அமைச்சர் எம்.சி.சம்பத் பேசுகையில், தமிழக மக்கள் வாழ்வில் வளம் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்படுகின்ற வரி வசூல் நிதியை மக்களுக்கே சென்றடையும் வகையில், பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை முதல்வர் தீட்டி செயல்படுத்தி வருகிறார்.
பெண்கள் இந்நாட்டின் கண்கள் என்று உணர்ந்து பெண்களின் வாழ்க்கை தரம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஏழ்மையிலும் ஏழ்மை நிலையில் உள்ள ஏழை பெண்களுக்காக விலையில்லா ஆடு, கறவை மாடுகளையும், பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் திருமண நிதியுதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கத்தினையும் அவர் வழங்கி வருகிறார். நடப்பாண்டில் சமூக நலத்திட்டங்களுக்கு முதல்வர் ரூ.43,449 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்துக்கு மட்டும் ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இப்போது சுமார் 31 லட்சம் பேர் முதியோர் ஓய்வூதியம் பெறுகின்றனர். இந்த திட்டத்துக்கென நடப்பாண்டில் ரூ.3,459 கோடி நிதியை முதல்வர் ஒதுக்கீடு செய்துள்ளார்.
ஏழை,எளிய கர்ப்பிணி தாய்மார்கள் கருவுற்றிருக்கும் காலத்தில் ஏற்படும் வருவாய் இழப்பினை ஈடுசெய்யவும், அவர்களுக்கு சத்தான உணவு கிடைக்க செய்யவும், எடை குறைவு இல்லாத குழந்தையினை ஈன்றெடுக்கும் வகையில் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் ஏற்கனவே வழங்கப்பட்ட நிதியுதவி ரூ. 6,000 என்பதனை மாற்றி ரூ.12,000 ரூபாயாக உயர்த்தி வழங்கி வருகிறார்.
பெண்களின் பணி சுமையை குறைக்கும் வகையிலும், அவர்களது மனச் சுமையை போக்கின்ற வகையிலும், விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை வழங்கி வருவதால் பெண்கள் தங்களது இல்லங்களில் மன மகிழ்ச்சியுடன் குடும்பத்தினையும், குழந்தைகளையும் பேணிக்காக்க இத்திட்டம் இன்றியமையாததாகும்.தமிழக முதல்வர் பொதுமக்களின் நலன் கருதி, ஒரு புதுமையான மக்களை நாடி வருவாய்த் துறை என்ற அம்மா திட்டத்தினை அறிவித்தார். ஓவ்வொரு வாரம் செவ்வாய்கிழமையன்று இந்த திட்டம் நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு முகாமில் பொதுமக்களால் வழங்கப்பட்ட மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்ததன் அடிப்படையில் தகுதி உள்ள நபர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது இத்திட்டத்தின் சிறப்பு அம்சமாகும். இதுபோன்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்ற தமிழக முதல்வர் தலைமையில் செயல்படுகின்ற அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.