ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஈரோட்டில் வியாழக்கிழமை தொடங்கியது.
இந்தியா முழுவதும் உள்ள ரயில்வே துறையில் உள்ள தொழிற்சங்கங்களை அங்கீகரிக்கும் தேர்தல் வியாழக்கிழமை தொடங்கியது. தெற்கு ரயில்வே ரயில்வேயில் டிஆர்இயு, எஸ்.ஆர்.எம்.யு, பிஎம்.எஸ்,எஸ்.ஆர்.இ.எப். உள்பட 8 சங்கங்கள் போட்டியிடுகின்றன.
இதற்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து மூன்று நாள்கள் தினமும் காலை 8 முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
தெற்கு ரயில்வேயில் மட்டும் இத்தேர்தலில் 86,140 பேர் வாக்களிக்கின்றனர். ஈரோட்டில் மட்டும் 3,408 பேர் வாக்களிக்கவுள்ளனர். குரூப் சி., டி பிரிவு ஊழியர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும்.
பதிவாகும் மொத்த வாக்குகளில் 30 சதவீதம் பெறும் தொழிற்சங்கம் மட்டுமே ரயில்வே வாரியத்தால் அங்கீகரிக்கப்படும். இதுபோல அங்கீகரிக்கப்படும் தொழிற்சங்கம் மட்டும்தான் ரயில்வே துறையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியும்.
இந்தியாவிலேயே முதல்முறையாக 2007-ல் தான் ரயில்வேத்துறையில் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெற்றது. இப்போது நடப்பது 2-வது தேர்தல். இதில் வெற்றி பெறும் தொழிற்சங்கங்களுக்கு 6 ஆண்டுகள் அங்கீகாரம் வழங்கப்படும்.
ஈரோட்டில் ஏரியா அலுவலர் ரதிப்பிரியா தலைமையிலான அதிகாரிகள் தேர்தல் பணிகளை கவனித்து வருகின்றனர்.