சிதம்பரத்தில் குளங்கள் தூர்வாரும் பணிக்கு தடை: வேதனையில் ஆலய பாதுகாப்புக் குழுவினர்
சிதம்பரத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயர வழிவகுக்கும் வகையில் இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் நகரில் உள்ள 12 குளங்களை தூர்வாரும் பணியில் இறங்கினர். இதற்கு உதவிஆட்சிய


சிதம்பரத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயர வழிவகுக்கும் வகையில் இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் நகரில் உள்ள 12 குளங்களை தூர்வாரும் பணியில் இறங்கினர். இதற்கு உதவிஆட்சியர் தடை விதித்ததால் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. இதனால் பொதுமக்களும், ஆலய பாதுகாப்பு குழுவினரும் வேதனைக்குள்ளாகியுள்ளனர்.
ஏரி, குளங்கள், ஆறுகள் ஆக்கிரமிப்புகளை எவ்வித ஆட்சேபனையின்றி அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. ஆனால் சிதம்பரம் நகரில் அரசு செய்ய வேண்டிய பணியான குளங்களை தூர்வாரும் பணியை பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் கையில் எடுத்து பணியை தொடங்கினர்.
சிதம்பரம் நகரில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. தமிழக முதல்வரின் மழைநீர் சேகரிப்பு திட்டத்தின் கீழ் நகரில் உள்ள குளங்களை தூர்வாரப்படும் களிப்பு நிறைந்த மண்ணை வெளியே கொட்ட அனுமதி அளிக்குமாறு இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் வேண்டுகோளை ஏற்று நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ் உதவிஆட்சியருக்கு கடிதமும் அனுப்பியுள்ளார். இதனையடுத்து இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் நகரில் உள்ளமுதல் கட்டமாக சிதம்பரம் நகரில் அண்ணாகுளம், ஓமக்குளம், யானைக்குளம் ஆகிய 3 குளங்களை தூர் வாருவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதனையடுத்து நகராட்சி நிர்வாகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் நகரில் உள்ள அண்ணாகுளம், யானைகுளம், ஓமக்குளம், இளமையாக்கினார் கோயில் குளம், தில்லையம்மன்கோயில் குளம் ஆகியவற்றை தூர்வாரும் பணியில் இறங்கினர். இதற்கு தொண்டு நிறுவனங்கள், சமூகஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டு ஆதரவாக பணியில் ஈடுபட முன்வந்தனர்.
இந்நிலையில் ஆக.3-ம் தேதி உதவிஆட்சியர் (பொறுப்பு) பாதாளம், குளம் தூர்வாரும் பணியை நிறுத்த உத்தரவிட்டார். இதனால் 90 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கப்பட்டு நகரில் உள்ள குளங்களை தூர்வாரும் பணி நிறுத்தப்பட்டது. எனவே தூர்வாரும் பணியை மீண்டும் தொடர அனுமதி வழங்க வேண்டும் எனக்கோரி இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். மேலும் முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆக.15-ம் தேதி குளங்களை தூர்வார அனுமதி கோரி ஓமக்குளத்தை நோக்கி பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட அழைப்பு விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...