மர்மகாய்ச்சல்: பள்ளி மாணவி சாவு
காஞ்சிபுரம் அருகே, மர்மகாய்ச்சலால் பள்ளி மாணவி பரிதாபமாக உயிர் இழந்தார்.
காஞ்சிபுரத்தை அடுத்த வையாவூர், பாரதி நகர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தென்னரசு. இவரது மனைவி இந்திரா. இவர்களுக்கு டேனியாசிகா (9) என்ற மகள் இருந்தார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவிக்கு வெள்ளிக்கிழமை திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர்.
ஆனால், மாணவியை உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துமனைவியில் அனுமதிக்குமாறு மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து மாணவியை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவில் அனுமதித்தனர்.இதைத் தொடர்ந்து மாணவியின் காய்ச்சல் எதிரொலியாக, சுகாதார துறை அதிகாரிகள் வையாவூர், பாரதி நகரில் முகாமிட்டு, மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர். கொசு ஒழிப்பு கழகத்தினர், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து வேறு யாருக்கும் மர்மக்காய்ச்சல் அறிகுறி இல்லை என்பதை சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இதற்கிடையில் மாணவி டேனியாசிகா சனிக்கிழமை நள்ளிரவு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இறந்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதே போல் செங்கல்பட்டை அடுத்த, மேலமையூரைச் சேர்ந்தவர் ஸ்ரீராமுலு மகள் பிருத்தி (12) மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வெள்ளிக்கிழமை நள்ளிரவு இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.