பழுதடைந்து சீரமைக்கப்பட்டு வரும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் தேரை கடைசிநேரத்தில் திங்கள்கிழமை மாலை உறுதித்தன்மைக்காக வருவாய்த்துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர், காவல்துறையினர் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். ஸ்ரீநடராஜர் தேர் முழுமையாக சீரமைக்கப்படாததால் தேரை வீதிகளில் பொதுமக்கள் வழங்கும் மண்டகப்படிக்கு நிறுத்தாமல் வீதிவலம் வந்து பகல் 12 மணிக்குள் நிலைக்கு கொண்டு வந்து நிறுத்திவிடுவது என அதிகாரிகளும், பொதுதீட்சிதர்களும் முடிவு எடுத்துள்ளனர்.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தரிசன திருவிழாவை முன்னிட்டு டிச.17-ம் தேதி (நாளை) செவ்வாய்க்கிழமை தேர்த்திருவிழா நடைபெறுகிறது. சித்சபையில் வீற்றுள்ள ஸ்ரீமந்நடராஜமூர்த்தி, ஸ்ரீசிவகாமசுந்தர் அம்பாள் மற்றும் உற்சவ மூர்த்திகளாக ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்பிரமணியர், ஸ்ரீசண்டிகேஸ்வரர் ஆகிய ஐவரும் தனி, தனி தேர்களில் வீதிவலம் வருகின்றனர். 5 தேர்களில் ஏற்கனவே ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாள் தேர் சீரமைக்கப்படுவதால், அதற்கு மாற்றாக முருகன் தேர் தயார் செய்யப்பட்டுள்ளது. முருகருக்கு தனியாக சப்பரத்தேர் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்ரீநடராஜர் தேரும் பழுதடைந்துள்ளதால், தேரை சீரமைத்து பிறகுதான் உறுதிச்சான்றிதழ் தரப்படும் என சிலதினங்கள் முன்பு நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் பிரேம்சந்தர் ஆய்வு செய்தபோது தெரிவித்தார். இதனால் ஸ்ரீநடராஜர் தேருக்கு உறுதிச்சான்று திங்கள்கிழமை மாலை வரை வழங்கப்படவில்லை.
இந்நிலையில் ஸ்ரீநடராஜர் தேரை இயக்குவது குறித்து திங்கள்கிழமை மாலை உதவிஆட்சியர் எம்.அரவிந்த், டிஎஸ்பி ஆர்.ராஜாராம், நெடுஞ்சாலைத்துரை உதவி செயற்பொறியாளர் வைத்தியநாதன், இந்து அறநிலையத்துறை செயல்அலுவலர் க.முருகன், வட்டாட்சியர் விஜயா, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். தேர் சீரமைக்கும் பணி நடைபெற்று வந்ததால் தேரை பழுதுநீக்கினால்தான் உறுதிச்சான்றிதழ் வழங்கமுடியும் என தெரிவித்தனர். இதனால் ஸ்ரீநடராஜர் தேர் வீதிவலம் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முட்டுக்கட்டை போடும் போது தேர் குலுங்கி தேர் கட்டமைப்பு பாதிக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறையினர் அஞ்சுகின்றனர். ஆனால் பொதுதீட்சிதர்கள், தாங்கள் அப்படியே தேரை இயக்கினாலும் அதிகளவு முட்டுக்கட்டை போடாமலும், தேரை எங்கும் நிறுத்தாமல் வீதிவலம் வந்து தேர்நிலையில் நிறுத்திவிடுவதாக அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
ஸ்ரீநடராஜர் தேர் நிற்காமல் வீதிவலம்: ஸ்ரீநடராஜர் தேர் பழுதடைந்துள்ளதால் தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதோடு தேரை நான்கு வீதிகளிலும் நிற்காமல் இயக்குவது என்றும், காலை 7 மணிக்கு தேரோட்டம் தொடங்கி 12 மணிக்கு நிலைக்கு கொண்டு வந்து ஸ்ரீநடராஜரை ஆயிரங்கால் மண்டபத்திற்கு கொண்டு சென்று அங்கு மண்டகப்படி நடத்துவம் என்றும், வீதியில் பொதுமக்கள் வழங்கும் மண்டகப்படி கிடையாது என பொதுதீட்சிதர்களும், அதிகாரிகளும் சேர்ந்து முடிவு எடுத்துள்ளனர். எனவே பொதுமக்கள் ஸ்ரீநடராஜரை காலை 7 மணி முதல் 12 மணிக்குள் தேரோட்டத்தில் போது பார்த்து தரிசனம் செய்து கொள்ளலாம்.