மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,500 கன அடியாக உயர்ந்துள்ள நிலையில் நீர் இருப்பு 8.11 டி.எம்.சியாக அதிகரித்துள்ளது.
தமிழகத்துக்கு 2.44 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 9-ம் தேதி கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு சுமார் 2 ஆயிரம் கன அடி வீதம் கர்நாடக அரசு தண்ணீர் திறந்தது. இந்த தண்ணீர் கடந்த 15-ம் தேதி மேட்டூர் அணைக்கு வந்தடைந்தது.கடந்த சில மாதங்களாக நீர்வரத்து இல்லாததால் ஆறு வறண்டிருந்தது. இதனால் கர்நாடகம் முதலில் திறந்துவிட்ட தண்ணீர் முழுவதுமாக வந்து சேரவில்லை. இதற்கிடையே கர்நாடக அரசு நீர் திறப்பை 5 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நீரின் வரத்து படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது.
ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் வினாடிக்கு 1,763 கன அடியாக இருந்த நீர் வரத்து, திங்கள்கிழமை 3,418 கன அடியாக அதிகரித்தது. இது இன்று காலை 8 மணியளவில் வினாடிக்கு 4,536 கன அடியாக உயர்ந்தது.இதனால் நீர்மட்டம் 31.46 அடியாக உயர்ந்துள்ளது. மேலும் அணையின் நீர் இருப்பும் 8.11 டி.எம்.சியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.