கட்டுமானப் பணிகள் பெரும்பாலும் முடிக்கப்பட்டுள்ள நிலையில், திறப்பு விழாவுக்குத் தயாராகி வருகிறது திருச்சி மாவட்ட மைய நூலக அலுவலகக் கட்டடம்.
திருச்சி மேலரண் சாலையில் காமராஜர் வளைவு அருகே 1982-ல் தொடங்கப்பட்டு செயல்பட்டு வந்த மாவட்ட மைய நூலகம் மற்றும் மாவட்ட நூலக அலுவலகக் கட்டடம் பழைமையாகி, இடிந்து விழும் நிலையில் இருந்தது.
இதைத் தொடர்ந்து, மாவட்ட மைய நூலகம் 2001-ம் ஆண்டும், மாவட்ட நூலக அலுவலகம் 2007-ம் ஆண்டும் சேதுராமன்பிள்ளை காலனியிலுள்ள வாடகைக் கட்டடத்துக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த 2010-ம் ஆண்டு மாவட்ட நூலக அலுவலகம் மற்றும் மைய நூலகம் இயங்கி வந்த கட்டடம் முழுமையாக இடிக்கப்பட்டு, புதிய கட்டடப் பணிகள் தொடங்கப்பட்டன.
ரூ. 3.74 கோடியில் தரைதளம் மற்றும் முதல் தளத்துடன் கட்டடப் பணிகள் தொடங்கின. ஒவ்வொரு தளமும் 17,000 சதுர அடியைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. முன்பு இருந்தது போல தற்போது கடைகள் ஏதும் இங்கு அமைக்கப்படாததால், ஒவ்வொரு பிரிவும் விசாலமாக கட்டப்பட்டுள்ளது.
மலைக்கோட்டை மெயின்கார்டுகேட் பகுதி தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இந்தப் பகுதியிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள பகுதியில் கட்டடம் கட்டப்பட்டால் இந்தத் துறையிடமிருந்து தடையில்லாச் சான்று பெற வேண்டும் என்ற நிபந்தனை இருப்பதால், தடையில்லா சான்று கோரப்பட்டது.
இந்தச் சான்று பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது. எனினும், கட்டடப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. கடந்த ஆண்டில்தான் தொல்லியல் துறை தடையில்லாச் சான்றை வழங்கியது.
என்ன என்ன பிரிவுகள் : தரைத்தளத்தில் தினசரி, பருவ இதழ்கள் பிரிவு (ஒரே நேரத்தில் 150-க்கும் மேற்பட்டோர் அமர்ந்து படிக்கும் வசதி), மற்ற நூலகங்களுக்கு நூல்கள் பிரித்து அனுப்பும் பிரிவு, நூல் இரவல் பிரிவு, அட்டைக் கட்டுதல் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், முதன் முறையாக பார்வையற்றவர்கள் நூல்கள் படிக்கும் வகையில் ப்ரெய்லி பிரிவு, கணினி வசதியுடன் கூடிய ஆடியோ பிரிவும் இந்தத் தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
முதல் தளத்தில் போட்டித் தேர்வுகளுக்கான பிரிவு, குழந்தைகள் பிரிவு, இணையதள பிரிவு மற்றும் மாவட்ட நூலக அலுவலர் அலுவலகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. தற்போது 80% பணிகள் முடிக்கப்பட்டுவிட்டன. சுற்றுச்சுவர் அமைத்தல், நூலக வளாகத்தில் பூந்தோட்டம் அமைத்தல் உள்ளிட்ட சில பணிகள் மட்டும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்தப் பணிகளும் விரைவில் முடிக்கப்படும். மேலும், வாகனங்கள் நிறுத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தக் கட்டடத்தில் 100 கி.வோ. ஜெனரேட்டர் வசதி செய்யப்பட்டிருப்பதால், நூலகத்தில் எவ்வித தடையுமின்றி நூல்களைப் படிக்கலாம் என்றார் மாவட்ட நூலக அலுவலர் அ.பொ. சிவகுமார்.
தற்போது மாவட்ட நூலக அலுவலகத்தின் கீழ் 64 கிளை நூலகங்கள், 89 ஊர்ப்புற நூலகங்கள், 4 பகுதிநேர நூலகங்கள், ஒரு நடமாடும் நூலகம் மற்றும் மாவட்ட மைய நூலகம் என 129 நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நூலகங்களில் 2.56 லட்சம் உறுப்பினர்களும், 3150 புரவலர்களும் உள்ளனர்.
அனைத்து நூலகங்களிலும் உள்ள நூல்களுக்கு பார் கோடு குறிப்பிட்டிருப்பதால், எந்த நூலகத்தில் எந்தெந்தப் பிரிவுகளில் என்ன என்ன நூல்கள் இருக்கின்றன என்பதை இங்கேயே தெரிந்து கொள்ள முடியும். மாவட்ட மைய நூலகத்தில் உறுப்பினராக இணைவோருக்கு உடனடியாக உறுப்பினர் அட்டை வழங்கப்படுகிறது. அந்த அட்டையுடன் வண்ணப் புகைப்படமும் இணைத்து வழங்கவுள்ளோம் என்றார் சிவகுமார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.