இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

இளைஞர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 2 வது நாளாக மறியல்: 110 பேர் கைது

சேரன்மகாதேவியில் கொலை செய்யப்பட்ட இளைஞர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 2 வது நாளாக இன்று மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் போராட்டத்தை கைவிடாததால் போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :23 ஜூலை 2013, 12:40 pm

ஷேக் அப்துல்காதர்

சேரன்மகாதேவியில் கொலை செய்யப்பட்ட இளைஞர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 2 வது நாளாக இன்று மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் போராட்டத்தை கைவிடாததால் போலீஸார் கைது செய்தனர். இதனிடையே இவ்வழக்கில் தொடர்புடைய ஊராட்சித் தலைவியின் கணவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

சேரன்மகாதேவி அருகே கூனியூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சுப்பு என்ற சுப்பிரமணியன் (26). இவர் அப்பகுதியில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள் தரமாக கட்டப்படவில்லை என புகார் தெரிவித்தாராம்.  இதனால் ஊராட்சித் தலைவியின் கணவர் இசக்கிமுத்துவுக்கும், சுப்பிரமணியனுக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது.

இதனிடையே சுப்பிரமணியனை திங்கள்கிழமை ஊராட்சித் தலைவியின் கணவர் இசக்கிமுத்து. இசக்கிமுத்துவின் சகோதரர்  பாலசுப்பிரமணியன் என்ற மணிபாண்டி மகன் முருகேசன் உள்ளிட்டோர் வெட்டி கொலை செய்தனர்.இதையடுத்து அங்கு பதற்றம் உருவானது.  இதையடுத்து கூனியூரில் டி.எஸ்.பி.பாலசுப்பிரமணியன் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சுப்பிரமணியனின் உறவினர்கள் சேரன்மகாதேவி அம்பாசமுத்திரம் பிரதான சாலையில் கூனியூரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். ஊராட்சித் தலைவியின் கணவர் இசக்கிமுத்து, அவரது சகோதரர்கள் பாலசுப்பிரமணியன், வாவுபாண்டியன், ஆறுமுகம், சந்திரன், பாலசுப்பிரமணியன்மகன் முருகேசன் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சுப்பிரமணியன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இருப்பினும் அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்துவிட்டனர். குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி இன்று 100 க்கும் மேற்பட்டோர் சேரன்மகாதேவியில் சார் ஆட்சியர்அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.இருப்பினும் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அதிகாரிகளின் கோரிக்கையை அவர்கள் ஏற்க மறுத்ததை அடுத்து 50 பெண்கள் உள்பட110 பேரை போலீஸார் கைது செய்து அங்குள்ள மண்டபத்தில் வைத்தனர்.

இதனிடையே இவ்வழக்கில் தொடர்புடைய ஊராட்சித் தலைவியின் கணவர் இசக்கிமுத்து, அவரது சகோதரர் ஆறுமுகம் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து சுப்பிரமணியன் உறவினர்களிடம் வட்டாட்சியர் ரா. சரஸ்வதி, டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதை தொடர்ந்து அனைவரும் விடுவிக்கப்பட்டனர். சுப்பிரமணியனை உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுப்பிரமணியன் இறுதி சடங்கு நடைபெற்றது. தொடர்ந்து கூனியூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.