விருதுநகர் அருகே போலி ஆவணங்கள் தயார் செய்து 3.25 ஏக்கர் திருக்கோயில் நிலத்தை மோசடி செய்த 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை செய்து வருகிறார்கள்.
விருதுநகர் அருகே பாண்டியன் நகரில் உள்ள முத்தால் நகரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் இங்குள்ள காளியம்மன் திருக்கோயில் பொறுப்பாளராகவும் இருந்து வருகிறார். தற்போது, திருவிழா நடைபெற இருப்பதால் திருப்பணிகளை மேற்கொள்வதற்கு நிர்வாகிகள் முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் திருக்கோயில் சார்பில் உள்ள நிலங்களுக்கு வில்லங்கச் சான்றிதழ் பெறுவதற்காக பத்திர பதிவு அலுவலகத்தில் விண்ணப்பித்தனர். அப்போது, இதில் குறிப்பி்ட்டுள்ள நிலங்கள் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு சொந்தமான 3.25 ஏக்கர் நிலத்தை
இப்பகுதியிலுள்ள சுப்பையா என்பவர் போலி ஆவணம் தயார் செய்து விற்பனை செய்துள்ளார். மேலும், இந்நிலத்தை முத்தால் நகரைச் சேர்ந்த பழனிச்சாமி வாங்கியுள்ளதும், இதற்கு சாட்சியாக பாலமுருகன்(40), நீலகண்டன்(43) உள்ளிட்டோர் சாட்சிகளாக கையொப்பம் இட்டுள்ளனர் என்பதும் தெரியவந்தது.
உடனே இது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை விருதுநகர் ஜே.எம்-2 நீதிமன்றத்தில் ராமகிருஷ்ணன் புகார் செய்தார். இதை விசாரணை செய்த நீதிபதி உடனே திருக்கோயில் நிலத்தை மோசடியாக விற்பனை செய்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் சுப்பையா, பழனிச்சாமி, பாலமுருகன், நீலகண்டன் உள்ளிட்டோர் மீது சனிக்கிழமை இரவு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.