விருதுநகர் அருகே நடைபெற இருந்த வயது குறைந்த இளம்பெண்ணின திருமணத்தை நிறுத்தியதோடு, இருகுடும்பத்தினரையும் அழைத்து அதிகாரிகள் சமரசம் செய்து வைத்தனர்.
விருதுநகர் அருகே இ.குமாரலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த வீரவேல்பாண்டியன்(23). இவர் தற்போது விருதுநகர் அல்லம்பட்டியில் கோழி இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவருக்கும் சாத்தூர் அருகே ரெங்கப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராமர் என்பவரின் மகளான சண்முகலட்சுமி(15). உறவினர்களான இருவருக்கும் இன்று திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு காலையில் 10.30 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில், உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுத்ததன் அடிப்படையில் திருமணத்திற்கு தயராகி வந்திருந்தனர். அதோடு, திருமண விருந்தும் தயார் நிலையில் இருந்தது. இந்நிலையில் திடீரென வயது குறைந்த இளம்பெண்ணுக்கு திருமணம் நடைபெறுவதாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரனுக்கு, இக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் காவல் துறையில் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் கமலாவதிக்கு நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
உடனே மாவட்ட சமூக நலத்துறை ஆலோசகர் ஜெயசீலி மற்றும் ஆமத்தூர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்து உடனே கிராமத்திற்கு செல்லும்படியும் கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில் திருமணம் நடைபெறுவதற்கு 1 மணிநேரத்திற்கு முன்பாக அக்கிராமத்திற்கு காவல் துறையினர் மற்றும் சமூக நலத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர்கள் சென்றனர். அங்கு இருமண வீட்டார்களின் பெற்றோர்களை அழைத்துப் பேசினார்கள்.அப்போது, அவர்கள் திருமணத்திற்காக உற்றார் உறவினர்கள் வந்துள்ள நிலையில், விருந்தும் தயராகி இருப்பதாக தெரிவித்தனர். ஆனால், தற்போது திருமணம் செய்தால் சட்ட விதிமுறைப்படி குற்றம், நீங்கள் உறவினர்களாக இருப்பதால் மூன்று ஆண்டுகளுக்கு பின்பு திருமணம் செய்து கொள்ளும்படி அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். அதற்கு திருமண வீட்டார்களும் ஒப்புக் கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.