மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கடலூர் மாவட்டம் வடவாற்றில் காங்கிரீட் தரைதளம்: நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயிகள் அவதி

காட்டுமன்னார்கோயில் அருகே வடவாற்றில் இருகரைகளிலும் காங்கிரீட் தரைதளம் அமைத்து சீரமைக்கப்பட்டதால் அப்பகுதியில் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

News image
Updated On :27 ஜூன் 2013, 10:29 am

ஜி.சுந்தரராஜன்

காட்டுமன்னார்கோயில் அருகே வடவாற்றில் இருகரைகளிலும் காங்கிரீட் தரைதளம் அமைத்து சீரமைக்கப்பட்டதால் அப்பகுதியில் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் நீர்ஆதாரமான வீராணம்ஏரிக்கு தஞ்சை மாவட்டம் அணைக்கரையிலிருந்து காவிரி நீர் வடவாறு வழியாக வந்து சேருகிறது. இந்த ஆற்றின் நீளம் சுமார் 22 கி.மீ. கஞ்சங்கொல்லை என்ற கிராமத்தில் தொடங்கி ருத்திரசோலை என்ற கிராமம் வரை சுமார் 22 பாசன மதகுகள் வடவாற்றின் கீழ்புறம் மற்றும் மேல்புறத்தில் உள்ளன. பாசனத்திற்காக அணைக்கரை திறந்த பின்னர் தொடர்ந்து கிட்டத்தட்ட மார்ச் மாதம் வரை வடவாற்றில் நீர் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் வடவாற்றில் தரைதளம் அமைக்கப்பட்டதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மக்களும், விவசாயிகளும் அவதியடைந்துள்ளனர்.

இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சி தேசிய பொதுக்குழு உறுப்பினரும், காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்க துணைத் தலைவருமான கே.வி.கண்ணன்பிள்ளை தெரிவித்தது: 1998ம் ஆண்டு புதிய வீராணம் திட்டம் தொடங்கப்பட்ட போது ரூ.110 கோடி செலவில் வடவாறு சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. வடவாற்றில் இருகரைகளையும் காங்கிரீட் பாலகைகள் கொண்டு லைனிங் செய்து வடவாற்றின் தரைத்தளம் முழுமையும் காங்கிரீட் பணிகளாக செய்யப்பட்டது. அப்போது காட்டுமன்னார்கோயில் பேரூராட்சி தலைவராக இருந்த நான் வடவாற்றில் காங்கிரீட் மூலம் தரைதளம் அமைப்பதற்கு எதி்ர்ப்பும், எச்சரிகையும் செய்தேன். இருப்பினும் பணிகள் செய்து முடிக்கப்பட்டன. அதன் பலனாக தற்போது நிலத்தடி நீர்மட்டம் குறைந்து காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் உள்ள வடவாற்றின் கீழ்புரம், மேல்புறம் கரைகளில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பலனை அனுபவித்து வருகின்றனர்.

தரைதளம் அமைக்காமல் இருத்திருந்தால் கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு வடவாற்றின் மூலம் இரு கரைகளிலும் உள்ள கிராமங்களுக்கு நீர்கசிவு (Seepage) மூலம், நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் இருந்திருக்கும். ஆனால் தற்சமயம் காட்டுமன்னார்கோயில் நகரத்தில் 40 அடியில் இருந்த நிலத்தடி நீர் மட்டம் 100 அடிக்கு சென்று விட்டது. 100 அடியிலிருந்து நிலத்தடி நீர்மட்டம் 150 அடிக்கு சென்று விட்டது. வீட்டு உபயோகத்திற்கு சாதாரண ஜெட் மோட்டார் பயன்படுத்தி மக்கள், தற்போது நீர்மூழ்கி மோட்டார்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். விவசாயிகளின் பம்பு செட் மோட்டார்களும் பாதிக்கப்பட்டுள்ளன. அரசின் தவறான கொள்கையினால், பொதுமக்களுக்கும் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர் என்கிறார் கே.வி.கண்ணன்பிள்ளை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.