விருதுநகர் அருகே தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் குறைவான கூலி வழங்குவதாக கூறி கிராம மக்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது ரோசல்பட்டி கிராமம். இக்கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் சார்பில் கண்மாய் மற்றும் வரத்துக்கால்வாய் தூர்வாறும் பணி நடைபெற்று வருகிறது. இதில், 100-க்கும் மேற்பட்டோர் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வியாழக்கிழமை மாலையில் இத்திட்டத்தில் வேலை செய்தவர்களுக்கு நாளொன்றுக்கு தலா ரூ.30 என்ற அளவில் ஒரு வாரத்திற்கான கூலியாக வழங்கியுள்ளனர். இதனால், கிராம மக்கள் ஆத்திரமடைந்தனர். இதையடுத்து, வழக்கம் போல் பணிக்கு திரும்பிய கிராம மக்கள் திடீரென பணியை பாதியில் நிறுத்தி கூலி குறைவாக வழங்குவதை கண்டித்து பாண்டியன் நகரில் உள்ள ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, பின் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சேதுராமன் விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, தொழிலாளர்கள் ஏற்கனவே விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் குடும்பம் நடத்த முடியாத அளவில் கஷடத்தில் ஜீவனம் நடத்தி வருகிறோம். இதில், கூலி குறைவாக வழங்குவதாக கிராம மக்கள் தெரிவித்தனர். அதையடுத்து, ஊராட்சி தலைவர் அவர்களிடம் கூறுகையில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தி்ல் குறிப்பிட்ட அளவு வேலையில் ஈடுபட்டால் முழு அளவு கூலியாக வழங்கப்படும். இல்லையென்றால் எந்த அளவிற்கு பணி செய்யப்பட்டுள்ளதோ அதைவைத்து கூலியாக வழங்கப்படுகிறது. அதனால், அதிகாரிகள் அளந்து கொடுக்கும் அளவிற்கு பணியில் ஈடுபட வேண்டும் என கிராம மக்களை ஊராட்சி தலைவர் சேதுராமன் கேட்டுக் கொண்டார். அதன் பின்னர் சாலை மறியலை கைவிட்டு பணிக்கு திரும்பினார்கள்.இந்த சாலை மறியல் போராட்டத்தினால் விருதுநகர்-காரியாபட்டி பகுதிக்குச் செல்லும் போக்குவரத்து அரை மணிநேரம் பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.