கடலூரில் இருந்து அனுமதிக்கப்படாத வழித்தடத்தில் செல்ல முயன்ற 5மணல் லாரிகள், மணல் கடத்திய 6 மாட்டு வண்டிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கடலூர் தாசில்தார் ராஜாராம் மற்றும் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கடலூர் குண்டுசாலையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக புதுச்சேரிக்கு செல்ல முயன்ற 5 மணல் லாரிகளை பிடித்து சோதனை செய்தனர்.
விசாரணையில் பண்ருட்டி அருகே உள்ள கண்ட்ரக்கோட்டை மணல் குவாரி மற்றும் மாளிகை மேடு கிராமத்தில் உள்ள 2-வது விற்பனை நிலையத்தில் இருந்தும் லாரிகளில் மணலை எடுத்துக்கொண்டு புதுச்சேரி வழியாக மரக்காணம், குயிலாப்பாளையம் போன்ற பகுதிகளுக்கு கொண்டுசெல்ல முயன்றது தெரியவந்தது. இதை அடுத்து 5 மணல் லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடலூர் மாவட்டத்தில் இருந்து லாரிகளில் மணல் ஏற்றி செல்லும் சிலர் புதுச்சேரி வழியாக விழுப்புரம் மாவட்டத்துக்கு செல்வதாக கூறி விட்டு புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பகுதிகளுக்கே மணல் விநியோகம் செய்கின்றனர். இதனால் புதுச்சேரி வழியாக மணல் ஏற்றி செல்வதற்கு லாரிகளுக்கு அனுமதி கிடையாது.
தமிழ்நாட்டில் உள்ள பாதை வழியாகத்தான் மணலை கொண்டு செல்ல வேண்டும். புதுச்சேரி வழியாக மணல் ஏற்றி செல்ல முயன்றதால் 5 லாரிகளையும் பறிமுதல் செய்யப்பட்டதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல் கடலூர் கெடிலம் ஆற்றில் அனுமதி இல்லாமல் மணல் அள்ளிய 6 மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.