சேலத்தில் உள்ள தொழிலதிபர் வீட்டில் கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட 2 சிறுமிகளை குழந்தைகள் நலக் குழுமம் மீட்டது.
சேலம் அஸ்தம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் சூசைராஜ் தலைமையிலான போலீஸார் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு ஜான்சன்பேட்டை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டு சிறுமிகள் எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருப்பதைக் கண்ட போலீஸார், அவர்களை மீட்டு சைல்டு லைன் அமைப்பில் ஒப்படைத்தனர்.பின்னர், அவர்கள் குழந்தைகள் நலக் குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். இதையடுத்து, காந்தி சாலைப் பகுதியில் உள்ள லைஃப் லைன் பெண்கள் வரவேற்பு இல்லத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் பிரபு, குழந்தைகள் நலக் குழுமத் தலைவர் சேவியர் ஆகியோர் அந்தச் சிறுமிகளிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சிறுமிகள் இருவரும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வகிதா பானு (16), ரூபிநிஷா பானு (13) என்பதும், இருவரையும் அவர்களது உறவினர்கள், சேலம் செவ்வாய்ப்பேட்டையில் ஜவுளிக்கடை நடத்தி வரும் உபயத் ரகுமானிடம் ஒப்படைத்திருந்ததும் தெரிய வந்தது.ஜான்சன் பேட்டையில் உள்ள உபயத் ரகுமானின் வீட்டில் கடந்த சில மாதங்களாக வீட்டு வேலை செய்து வந்த இருவரும் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) அங்கிருந்து தப்பி, திண்டுக்கல் செல்வதற்காக வெளியே வந்ததும் தெரிய வந்தது.
வகிதா பானு ரூ.40 ஆயிரத்துக்கும், ரூபிநிஷா பானு ரூ.15 ஆயிரத்துக்கும் கொத்தடிமைகளாக விற்பனை செய்யப்பட்டுள்ளனர். உபயத் ரகுமானின் வீட்டில் இருப்பவர்கள் சிறுமிகள் இருவருக்கும் சரியான உணவு, அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல், அதிகப்படியான வேலை வாங்கி கொடுமைப்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.கழிப்பறையை சரிவரச் சுத்தம் செய்யவில்லை என்பதற்காக அங்கேயே அமர்ந்து உணவு உள்கொள்ளும்படி அவர்கள் வற்புறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சிறுமிகளிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்ட பிறகு, அவர்களைக் கொடுமைப்படுத்தியவர்கள் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல்- வன்கொடுமை தடுப்புச் சட்டம் 2013-ன் கீழ் நடவடிக்கை எடுக்கவிருப்பதாக, குழந்தைகள் நலக் குழுமத் தலைவர் சேவியர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.