காங்கிரஸ் கட்சி மீது தவறான குற்றச்சாட்டுகளைச் சுமத்தும் கார்த்தி சிதம்பரம் மீது காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் யுவராஜா கூறியுள்ளார்.சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் பொறுப்புள்ள அமைச்சராகச் செயல்பட்டு வருகிறார்.ஆனால் அவர் மகன் கார்த்தி சிதம்பரம் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு வருகிறார்.அண்மையில் திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாட்டை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.48 ஆண்டுகளாக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெறவில்லை.எனினும் தற்போது உள்ள காங்கிரஸ் தலைமை காமராஜர், மூப்பனார் போன்றோரின் வழியைப் பின்பற்றி செயல்படுவதால் காங்கிரஸ் உயிரோட்டத்துடன் திகழ்கிறது.மாநில காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் மக்கள் பிரச்னையை முன்னிலைப்படுத்தி இதுவரை 6 பொதுக்கூட்டங்களை நடத்தியுள்ளார்.கட்சியில் உள்ள அனைத்துத் தலைவர்களையும் ஒருங்கிணைத்து ஞானதேசிகன் வழிநடத்திச் செல்கிறார்.இன்னும் ஓரிரு வாரங்களில் காங்கிரஸின் மாநில நிர்வாகிகள் பட்டியல் வெளிவர உள்ளது.இதற்குக் கலங்கத்தை ஏற்படுத்தும் வகையிலும், தொண்டர்களிடம் குழப்பதை ஏற்படுத்தும் வகையிலும் கார்த்தி சிதம்பரம் பேசியுள்ளார்.
2009-ம் ஆண்டு முதல் மாணவர் காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸ் தேர்தல் 2 முறைகள் நடைபெற்றுள்ளன. இந்தத் தேர்தல்களை கார்த்தி குறை கூறுகிறார். இது ஏற்புடையது இல்லை. இரண்டு தேர்தல்களும் ஜனநாயக முறையில்தான் நடைபெற்றுள்ளன.மாணவர் காங்கிரஸின் தேர்தல் முடிவுகள் 13 நாள்கள் நிறுத்தி வைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.அந்த விசாரணைக்குப் பிறகு கலையரசன் வெற்றிபெற்றதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.தேர்தலில் முறைகேடு செய்ததாகக் கண்டறியப்பட்ட 9 நிர்வாகிகளைத் தேர்தல் அதிகாரிகள் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்துள்ளனர்.இதில் இருந்தே தேர்தல் நேர்மையாக நடைபெற்றுள்ளதை அறியலாம்.அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக கார்த்தி சிதம்பரம் 2005-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார்.இவர் எத்தனை முறை சத்தியமூர்த்திபவனுக்கு வந்துள்ளார்?கட்சி விவகாரம் தொடர்பாக ஒருமுறைகூட ஞானதேசிகனைச் சந்தித்துப் பேசியது இல்லை.இதற்கு மாறாக, தன் அணியைச் சேர்ந்த நிர்வாகிகளின் தோல்வியை மறைப்பதற்காகவும் அவரின் தவறான செயல்பாட்டை மறைப்பதற்காகவும் காங்கிரஸ் தலைமை மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார்.வாரத்தில் 20 நாள்கள் வெளிநாடுகளில் இருக்கும் கார்த்தி, 10 நாள்களே தமிழகத்தில் சொந்தத் தொழிலைக் கவனிப்பதற்காக இருக்கிறார்.பகுதி நேர அரசியல்வாதியான அவருக்கு, அரசியல் பற்றி ஒன்றும் தெரியவில்லை.எனவே, பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியதற்காக ஞானதேசிகனிடம் கார்த்தி மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லாவிட்டால், காங்கிரஸ் மேலிடம் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








