

நாம் தமிழர் கட்சியின் சார்பில் இன்று கடலூரில் நடைபெறவிருந்த பொதுக்கூட்டத்துக்கு போலீஸார் தடை விதித்துள்ள நிலையில், இன்று தடையை மீறி நாங்கள் பொதுக்கூட்டத்தை நடத்துவோம் என்றார் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான்.
நாம் தமிழர் கட்சியின் சார்பில், கடலூரில் இன்று மே 17 முள்ளிவாய்க்கால் நினைவு தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்து அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்திருந்தனர். இந்நிலையில், இந்தப் பொதுக்கூட்டம், பேரணிக்கு தடை விதிக்கக் கோரி கடலூர் போலீசார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்தனர். அதில் பேரணிக்கு நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் பொதுக்கூட்டம் நடத்த நாம் தமிழர் கட்சி ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் பொதுக்கூட்டத்துக்கும் போலீசார் தடை விதித்து, நாம் தமிழர் மாவட்டச் செயலர் வீட்டில் நோட்டீஸ் ஒட்டினர்.
இந்நிலையில், புதுச்சேரியில் தங்கியிருந்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், பொதுக்கூட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது,
கடலூரில் இன்று பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த திட்டிமிட்டிருந்தோம். நான்கு நாட்களுக்கு முன்னதாகவே ஏற்பாடுகள் எல்லாம் செய்து விட்டோம். இந்நிலையில் இன்று காலை திடீரென்று கூட்டம் நடத்த போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர்.
பொலீஸார் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தபோது, பொதுக்கூட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. ஆனால் போலீஸார் இன்று அனுமதி மறுத்துள்ளனர். எனவே, நாங்கள் நீதிமன்றம் சொன்ன படி, போலீஸார் தடையை மீறி இன்று பொதுக்கூட்டம் நடத்தத் தீர்மானித்துள்ளோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.