சேலத்தில் 12 மணி நேரம் கொட்டியது மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக சேலம் மாநகரம், மாவட்டத்தில் தொடர்ந்து 12 மணி நேரம் மழை பெய்தது. இதனால் நகரில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை
Updated on
1 min read

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக சேலம் மாநகரம், மாவட்டத்தில் தொடர்ந்து 12 மணி நேரம் மழை பெய்தது. இதனால் நகரில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக் கூடும் என்று அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில், சேலம் மாநகரில் சனிக்கிழமை காலை 6 மணி அளவில் மழை பெய்யத் தொடங்கியது. தூறலுடன் தொடங்கிய மழை நேரம் செல்லச் செல்ல வலுக்கத் தொடங்கியது. இதையடுத்து ஒரே சீரான அளவில் பகல் முழுவதும் மழை பெய்தது. மாலை 6 மணிக்கு பிறகும் மழை தொடர்ந்தது.காலை நேரத்தில் மழை பெய்ததால் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டிய மாணவ-மாணவிகள், வேலைக்குச் செல்ல வேண்டிய பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். தொடர் மழை காரணமாக வர்த்தக நிறுவனங்கள், கடைகளில் வியாபாரம் இல்லாமல் வியாபாரிகள், உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டனர். பல வர்த்தக நிறுவனங்களுக்கு மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

சில பள்ளிகளில் முற்பகலில் மட்டுமே வகுப்புகள் நடைபெற்றன. பிற்பகலில் விடுமுறை அறிவிக்கப்பட்டது. தொடர் மழை காரணமாக எப்போதும் நெரிசலுடன் காணப்படும் மாநகர பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பல மணி நேரத்துக்கு இடைவெளி இன்றி பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

சேலம் மாநகரைப் போலவே மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. வாழப்பாடி, ஆத்தூர், ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் நிகழாண்டில் போதிய மழை இல்லாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். விவசாய கிணறுகளும், ஆழ்துளை கிணறுகளும் வறண்டுபோகும் நிலை இருந்து வருகிறது.

இந்த நிலையில் சனிக்கிழமை காலை முதல் பெய்து வரும் மழை விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. கடந்த மாதத்தில் சில நாள்கள் பெய்த மழை, கால்நடைகளுக்கு தீவனத் தேவையை பூர்த்தி செய்ய மட்டுமே போதுமானதாக இருந்தது. இந்த நிலையில் இப்போது பெய்யும் மழை தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இருப்பினும் இந்த மழையைப் போன்று மேலும் சில நாள்களுக்கு பெய்தால் மட்டுமே அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என்கின்றனர் விவசாயிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com