தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரை அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்துவிட்டு வந்த ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஏற்காடு தொகுதிக்கு கடந்த அக்டோபர் 4-ம் தேதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து நடத்தை விதிகள் அமலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, அரசு அதிகாரிகள் யாரும் அமைச்சர், அரசியல் கட்சிப் பிரமுகர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசக் கூடாது.
இந்த நிலையில் ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலராக உள்ள எம்.ஜெயராமன், வெள்ளிக்கிழமை (நவம்பர் 15) நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்துப் பேசியதாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்துவதற்கு மாவட்டத் தேர்தல் அதிகாரி க.மகரபூஷணம் உத்தரவிட்டார்.
விசாரணையில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன், அமைச்சரை தனிப்பட்ட முறையில் சந்தித்தது உண்மை என்று தெரிய வந்தது. இதையடுத்து அவரை தாற்காலிக பணி நீக்கம் செய்து மகரபூஷணம் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.அமைச்சரை சந்தித்துப் பேசியதற்காக வட்டார வளர்ச்சி அலுவலர் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது அரசு அதிகாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.