சிதம்பரம் நகரில் சாலையில் திடீரென உயர்அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால், அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் இருந்த மின்சாதனங்கள் எரிந்து புகைந்து நாசமானது.
சிதம்பரம் சின்னசெட்டித்தெருவில் புதன்கிழமை மாலை 3 மணியளவில் திடீரென சத்தத்துடன் உயர்அழுத்த மின்கம்பி திடீரென அறுந்து விழுந்தது. இதனால் சின்னசெட்டித்தெரு, நெல்லுக்கடைத்தெரு உள்ளிட்ட தெருக்களில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் இருந்த இன்வெர்ட்டர்கள், டீவி, ரெப்ரிஜிரேட்டர், மின்மோட்டார்கள் உள்ளிட்ட மின்சாதனங்கள் புகைந்து வீணாகின. தகவல் அறிந்த சிதம்பரம் மின்வாரியத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து அறுந்து கிடந்த மின்கம்பியை சீரமைத்து பணியில் ஈடுபட்டனர்.
தொடரும் மின்கம்பி அறுந்து விழும் சம்பவம்: சிதம்பரம் நகரில் தெற்குரதவீதியில் சில மாதங்கள் முன்பு உயர்மின்அழுத்த கம்பி அறுந்து விழுந்தது. இதே சின்னசெட்டித்தெருவில் இருமுறை மின்கம்பி அறுந்து விழுந்ததாகவும், பின்னர் மின்வாரியத்தினர் வந்து சீரமைத்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். சமீபத்தில் சிதம்பரம் அருகே திட்டுக்காட்டூர் கிராமத்தில் அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்து ஹரிதாஸ் (38), சுப்பிரமணியன் (33) இருவர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.