சேலம் புதிய பேருந்து நிலையத்தில் தன்னிடம் இருந்த ரூ.68 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டதாக மராட்டிய மாநில இளைஞர் புகார் பொய் புகார் அளித்த சம்பவம் சேலத்தில் வியாழக்கிழமை பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் அருண்குமார் (30). மொத்த நகை வியாபாரியான இவர், திருச்சியில் உள்ள தனது சித்தப்பாவும் நகை வியாபாரியுமான மூல்சந்துக்கு அடிக்கடி தனது ஊழியர்கள் மூலம் பணம் கொடுத்து அனுப்புவது வழக்கம்.
அதன்படி, தன்னிடம் வேலை செய்யும் மராட்டிய மாநிலம் மங்கல்வாடே பகுதியைச் சேர்ந்த சோம்நாத் (21) என்பவரிடம் ரூ.68 லட்சத்தை கொடுத்து, மூல்சந்திடம் கொடுத்துவிட்டு வரும்படி கூறியுள்ளார். இந்த நிலையில் வியாழக்கிழமை பிற்பகலில் சேலம் புதிய பேருந்து நிலையம் வந்த சோம்நாத், பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள பள்ளப்பட்டி காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.
பெங்களூருவில் இருந்து அரசுப் பேருந்தில் தான் கொண்டு வந்த ரூ.68 லட்சம் அடங்கிய பையை, புதிய பேருந்து நிலையத்தில் வைத்து மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டதாக புகாரில் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளிக்கவே, பெங்களூருவில் இருந்து பணத்தின் உரிமையாளர் வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார்.
அதில், பணத்தை அபகரிக்க திட்டமிட்ட சோம்நாத், பணப்பையை பெங்களூருவில் மறைவான இடத்தில் வைத்துவிட்டு சேலத்தில் காணாமல் போனதாக நாடகமாடியது தெரிய வந்தது.
இதையடுத்து புகார் தெரிவித்த சோம்நாத்தையே பிடித்த ஆய்வாளர் செந்தில்குமார், அவரை பெங்களூரு போலீஸாரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளார். இந்த சம்பவம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.