காஞ்சிபுரத்தில் 2 கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி செவ்வாய்க்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் திருக்காலிமேடு எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த பழனி மகன் டான்மணி (எ) மணிகண்டன் (31). ஆட்டோ டிரைவர். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டு அருகில் உள்ள ஒரு குளக்கரையில் சிலருடன் பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மக் கும்பல் சிலர் மணிகண்டனை சராமரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த விஷ்ணுகாஞ்சி போலீஸôர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மணிகண்டனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மணிகண்டன் மீது கடந்த 2009-ஆம் ஆண்டு தக்காளி சீனிவாசனை கொலை செய்த வழக்கு, 2012-ம் ஆண்டு ரயில்வே சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில் வசூல் ராஜாவை கொலை செய்தது ஆகிய 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்ட மணிகண்டன் அண்மையில் ஜாமீனில் வெளியே வந்தார். பழிக்கு பழி நடவடிக்கையாக மணிகண்டனை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.