கேரளத்துக்கு கடத்த முயன்ற 1,400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 1,400 கிலோ ரேஷன் அரிசியை பறக்கும்படை தனி தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல்
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 1,400 கிலோ ரேஷன் அரிசியை பறக்கும்படை தனி தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

மாவட்ட பறக்கும்படை தனி தாசில்தார் சுகிபிரேமலா, வருவாய் ஆய்வாளர் செய்யதுஅலி, ஊழியர் ஜான்பிரைட் உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை காலையில் கருங்கல் அருகே ஆலஞ்சி பகுதியில் ரோந்து சென்றபோது, அப்பகுதி வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 400 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஆட்டோ ஓட்டுநர் தப்பியோடினாராம்.

தொடர்ந்து, அதிகாரிகள் குழித்துறை அருகே வாகன கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதி வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த மாருதி காரை நிறுத்த சைகை காட்டினர். கார் நிற்காமல் சென்றதையடுத்து அதிகாரிகள் வாகனத்தில் காரை துரத்திச் சென்றனர். கார் 3 கிலோ மீட்டர் தொலைவு சென்றபின் படந்தாலுமூடு பகுதியிலிருந்து குந்நுவிளை கிராம சாலையில் சென்று சாஸ்தான்குளம் அருகில் காரை நிறுத்திவிட்டு அதன் ஓட்டுநர் தப்பியோடினாராம்.

இதைத் தொடர்ந்து அதிகாரிகள் காரை சோதனையிட்டபோது, அதில் 1,000 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததும், அவற்றை கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது. காருடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து கொண்டு சென்ற போது, 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கும்பல் அதிகாரிகளை தகாத வார்த்தைகள் பேசி மிரட்டி சென்றனராம். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com