சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

கர்நாடக அரசு மேகதாது பகுதியில் அணைக் கட்ட முயற்சிப்பதை மத்திய அரசு தடுக்க வேண்டும்: வைகோ

கர்நாடக அரசு மேகதாது பகுதியில் அணைக்கட்ட முயற்சிப்பதை மத்திய அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். காவிரி நீரை நம்பியுள்ள தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் இச்செயலில் ஈடுபட்டுள்ள கர்நாடக

News image
Updated On :4 செப்டம்பர் 2013, 5:47 pm IST

கர்நாடக அரசு மேகதாது பகுதியில் அணைக்கட்ட முயற்சிப்பதை மத்திய அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். காவிரி நீரை நம்பியுள்ள தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் இச்செயலில் ஈடுபட்டுள்ள கர்நாடக அரசுக்கு எங்கள் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.வேலூரில் மதிமுக மாவட்டக் கழகங்கள் சார்பில் கட்சி நிதியளிப்பு விழா கூட்டம்  நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்திருந்த வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:

ஆகஸ்ட் 15-ல் விருதுநகரில் அண்ணா பிறந்த நாள் விழாவை மதிமுக பிரம்மாண்ட முறையில் நடத்துகிறது. அண்ணா வழிநடத்திய நேர்மையான அரசியலை நாங்கள் முன்னெடுத்து செல்கிறோம். நாடு நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கியுள்ள இந்நேரத்தில் இந்த மாநாடு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.அகில இந்திய அளவில் அரசியலில் மாற்றம் தேவைப்படுகிறது.நாடெங்கும் உள்ள மக்கள் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் மீது மக்கள் மிகுந்த ஆத்திரமும், கோபமும் கொண்டுள்ளனர்.விலைவாசி ஏற்றம், பொருளாதார வீழ்ச்சி அடித்தட்டு மக்கள், நடுத்தர மக்களை வெகுவாக பாதித்துள்ளது. மன்மோகன்சிங் அரசின் தவறான மக்கள் விரோத பொருளாதார கொள்கைதான் இதற்கு காரணம். சுதந்திரம் அடைந்தது முதல் இதுபோன்ற பொருளாதார நெருக்கடியை நாடு சந்தித்தது இல்லை.

இந்த கரன்சி சுனாமியில் காங்கிரஸ் அரசு காணாமல் போய்விடும். தில்லியில் இனி ஒருபோதும் காங்கிரஸ் பொறுப்புக்கு வர முடியாது. மீனவர் பிரச்னை, இலங்கை தமிழர் பிரச்னை, நதிநீர் பங்கீட்டு பிரச்னையில் மத்திய அரசு மன்னிக்கமுடியாத துரோகத்தை இழைத்துள்ளது.கச்சத் தீவு ராமநாதபுரம் மன்னருக்கு உரியதாக இருந்தது என்பதை பிரிட்டிஷ் அரசு ஆவணங்கள் தெரிவிக்கின்றன. கச்சத்தீவு தமிழகத்துக்கு உரியது என்பது பதிவு செய்யப்பட்ட ஒன்று. இந்நிலையில், மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் ஒரு பிரமாண வாக்குமூலம் அளித்துள்ளது. அதில் பிரிட்டிஷ் அரசு எல்லை வகுக்கும்போது கச்சச் தீவு இலங்கையோடு இணைக்கப்பட்டிருந்தது என்று தவறான தகவல் தெரிவித்துள்ளது.அந்த பிரமாண வாக்குமூலத்தை மன்மோகன் அரசு தயார் செய்ததா? மகிந்த ராஜபட்ச அரசு தயாரித்ததா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த இலங்கை காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும். இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்துவதன் மூலம் நீதியை குழித்தோண்டி புதைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதனால், இந்தியா அந்த மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடாது என்பதோடு, இலங்கையில் காமன்வெல்த் நடைபெறக் கூடாது என்பதுதான் எங்கள் கோரிக்கை. இதற்காகவே தமிழக மாணவர்கள், இளைஞர்கள் போராடி வருகின்றனர்.கர்நாடக அரசு காவிரியின் குறுக்க மேகதாது என்ற இடத்தில் அணைக்கட்ட முயற்சிக்கிறது. அதை மத்திய அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். காவிரி நீரை நம்பியுள்ள தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் கர்நாடக அரசின் இச்செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.

பாராளுமன்றத் தேர்தலில் மதிமுக போட்டியிடும். தேர்தல் களத்தை எப்படி சந்திப்பது என்பது குறித்து கட்சியின் அனைத்து மட்டத்திலும் விவாதித்து முடிவு எடுக்கப்படும்.22 ஆண்டுகளாக எவ்வித தவறும் செய்யாத பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் வேலூர் மத்தியச் சிறையில் 22 ஆண்டுகளாக உள்ளனர். அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறோம். உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கு உள்ளது. அந்த வழக்கின் தீர்ப்பை நம்பிக்கையோடு எதிர்நோக்கியுள்ளோம்.அதேபோல் மகளிர் சிறையில் நளினி 22 ஆண்டுகளாக துன்பத்தை அனுபவித்து வருகிறார். அவர் எப்போதோ விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும். மனிதாபிமானம் இன்றி தொடர்ந்து மனதளவில் அவர் சிறைத் துறை அதிகாரிகளால் சித்ரவதை செய்யப்படுவதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம் என்றார் வைகோ.

கட்சியின் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் என்.சுப்பிரமணி உடனிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.