இந்தியாவின் பாதுகாப்பு கேலிக்குரியதாக உள்ளது : நாஞ்சில் சம்பத்

வேலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பா. செங்குட்டுவனை ஆதரித்து ஆம்பூரில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பங்கேற்று பேசியது, தற்போது நடக்கும்
இந்தியாவின் பாதுகாப்பு கேலிக்குரியதாக உள்ளது : நாஞ்சில் சம்பத்
Updated on
1 min read

இந்தியாவின் பாதுகாப்பு கேலிக்குரியதாக இருப்பதாக அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலர் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

வேலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பா. செங்குட்டுவனை ஆதரித்து ஆம்பூரில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பங்கேற்று பேசியது, தற்போது நடக்கும் நாடாளுமன்ற தேர்தல் 16-வது குருஷேத்திர யுத்தமாகும்.  இதில் தமிழக முதல்வர் விஷ்வரூபம் எடுத்துள்ளார்.  இரட்டை இலைக்கு வாக்களிப்பது தாய்க்கு செய்யும் உபகாரமாகும்.  மற்றவர்களுக்கு வாக்களிப்பது கடலில் விழுந்த மலைக்கு சமமாகும். 

தமிழக முதல்வர் பொதுமக்களை பார்த்து செய்வீர்களா என்று கேட்பதை மு.க. ஸ்டாலின் கேலி செய்கிறார். ஸ்டாலினை பார்த்து நான் கேட்கிறேன் உங்களுடைய பிரதமர் வேட்பாளர் யார் என்று கூற முடியுமா. முதல்வர் ஜெயலலிதாவை பற்றி பேச ஸ்டாலினுக்கு அருகதையில்லை.   கட்சியை கைப்பற்ற பிரச்சாரம் என்ற பெயரில் அவர் உலா வருகிறார்.   திமுகவின் புதிய ஹிட்லர் ஸ்டாலின்.  

இருண்டு கிடக்கும் இந்தியாவை விடியலுக்கு அழைத்துச் செல்ல முதல்வர் ஜெயலிலதாவால் மட்டுமே முடியும்.  இஸ்லாமியர்களுக்கு துரோகம் செய்தவர் கருணாநிதி.  இந்திய யூனியன் முஸ்லீம் லீகை பிளவுப்படுத்த காரணமானவர்.   அதிமுக ஆட்சியில் தான் உலமாக்களின் ஓய்வூதியம் உயர்த்தப்பட்டது.  ஹஜ் செல்லும் பயணிகளின் எண்ணிக்கையும் உயர்த்தப்பட்டது.  கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இஸ்லாமியர்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்க பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.   அதனால் இஸ்லாமியர்களின் பாதுகாவலர் ஜெயலலிதா தான்.   தமிழ்நாடு சமூக நல்லிணக்கத்தின் சொர்க்கமாக திகழ்ந்து வருகிறது. 

தேசிய கட்சிகளுக்கு விடை கொடுத்து வீட்டிற்கு அனுப்புங்கள்.  இந்தியாவின் பாதுகாப்பு கேலி கூத்தாக உள்ளது.  நாட்டின் மானம், மரியாதை குன்றிப்போய் உள்ளது.  அதனால் நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று கூறினார்.

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி, வேட்பாளர் பா. செங்குட்டுவன், தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கே.ஏ.கே. முகில், வாணியம்பாடி எம்எல்ஏ கோவி. சம்பத்குமார், ஆம்பூர் நகர செயலர் மதியழகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலர் ஆர். பாலசுப்பிரமணி, நகரமன்ற தலைவர் சங்கீதா, மாவட்ட விவசாய பிரிவு செயலர் ஆர். வெங்கடேசன், இளைஞர் அணிச் செயலர் ஜி.ஏ. டில்லிபாபு, மாதனூர் ஒன்றிய செயலர் ஜோதிராமலிங்கராஜா, ஆம்பூர் தொகுதி செயலர் அகரம்சேரி ஆர். வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com