தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் இலவசத் திட்டங்களைக் காட்டிலும் கல்வி, மருத்துவ வசதிகள் இலவசமாகக் கிடைப்பதையே விரும்புவதாக பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் வி.பி.ஈஸ்வரனை ஆதரித்து, சேலம் மாவட்டம் வாழப்பாடியில் அன்புமணி சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் மேலும் பேசியதாவது:
தமிழகத்தில் ஒரு காலத்தில் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த கல்வித்துறை இப்போது வேகமாக விலகிச் சென்று தனியார் வசம் உள்ளது. அதே நேரம், தனியார் வசம் இருந்த மதுக்கடைகளை அரசு நிர்வாகம் நடத்தி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வரும் அதிமுக, திமுக அரசுகளின் நிர்வாகத் திறமையின்மை காரணமாகவே இந்த இழிநிலை ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள், ஏழை எளியவர்கள் அனைவரும் அரசிடமிருந்து இலவசத் திட்டங்களை எதிர்பார்க்கவில்லை. மாறாக தங்களது குழந்தைகளுக்கு கட்டணமில்லாத தரமான கல்வியும், எட்டாத உயரத்தில் உள்ள உயர்தர மருத்துவச் சேவையும் இலவசமாகக் கிடைக்க வேண்டும் என்றே அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.இந்தியாவில் 500-க்கும் அதிகமான கட்சிகள் இருக்கும் நிலையில், எந்தக் கட்சியும் பிரதமர் வேட்பாளரை அறிவிக்க முடியவில்லை. அதேநேரம், தகுதியும் திறமையும் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி மட்டுமே நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து பிரசாரம் செய்து வருகிறது.
மோடி பிரதமரானால் தமிழகத்தில் வளர்ச்சிப் பணிகள் அதிக அளவில் மேற்கொள்ளப்படும். விலைவாசி கட்டுக்குள் கொண்டு வரப்படும். தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் நிகழாமல் தடுக்கப்படும். தமிழர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றார் அன்புமணி ராமதாஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.