சிதம்பரத்தில் நீதிபதியின் போக்கை கண்டித்து, அவர் மீது நடிவடிக்கை எடுக்க வலியுறுத்தி வழக்குரைஞர்கள் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர். அப்போது நீதிமன்ற பணியில் பங்கேற்ற மந்திரி என்ற வழக்குரைஞர் கட்டாயப்படுத்தி வெளியேற்றினர்.இரு நாற்காலிகள் தூக்கி வீசி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்கள் சங்க கூட்டம் தலைவர் ஜே.ரகோத்தமன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் எஸ்.செந்தில் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: சிதம்பரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-2 மாஜிஸ்டிரேட் மருதுபாண்டி வழக்குரைஞர்களை காழ்புணர்ச்சியுடன், மரியாதை குறைவாகவும், உயர்நீதிமன்ற உத்தரவையும் மற்றும் மாவட்ட நீதிமன்ற உத்தரவையும் மதிக்காமல் நடந்து கொண்டு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்து நடந்து கொள்கிறார். மேலும் திறந்த நீதிமன்றத்தில் வழக்குரைஞர்களையும், குமாஸ்தாக்களையும் திட்டியும், அவமானப்படுத்தியும் வருகிறார். எனவே நீதிபதியின் போக்கை கண்டித்து காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து வழக்குரைஞர்கள் திங்கள்கிழமை நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மூத்த வழக்குரைஞர் மந்திரி என்பவர் நீதிமன்றத்திற்குள் அமர்ந்திருந்து வெளியே வர மறுத்தார். இதனையறிந்த சில வழக்குரைஞர்கள் சென்று அவரை வெளியே வருமாறு அழைத்தும் வராததால், உள்ளே இருந்த நாற்காலிகளை எடுத்து வந்த வெளியே வீசியதில் அவைகள் உடைந்து சேதமுற்றனர். அதன் பின்னர் வழக்குரைஞர் சங்கத் தலைவர் ஜே.ரகோத்தமன் மற்றும் சில வழக்குரைஞர்கள் உள்ளே சென்று வழக்குரைஞர் மந்திரியை வலுக்கட்டாயமாக வெளியே அழைத்து வந்தனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.