வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து: அடவிநயினார் அணை 100 அடியை நெருங்கிறது

மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மிதமான மழையால் அணைகளின் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 100

News image
Updated On :6 ஆகஸ்ட் 2014, 10:44 am

ஷேக் அப்துல்காதர்

மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மிதமான மழையால் அணைகளின் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 100 அடி நெருங்கிறது.

தாமிரவருணி பாசனத்தில் தென்மேற்கு பருவ மழை நீடிக்கவில்லை. எனினும் மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை பெய்து வருகிறது. புதன்கிழமை காலை நிலவரப்படி கடனாநதி அணையில் 1 மி.மீ மழையும், குண்டாறு அணையில் 13 மி.மீ மழையும், அடவிநயினார் அணையில் 3 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

பருவ மழை சரிவர பெய்யாததால் நிகழ் கார் பருவ சாகுபடிக்கு தாமதமாக ஜூலை மாதம் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த ஆண்டை விட நிகழ் பருவத்தில் அணைகளின் நீர்மட்டம் 44 சதவீதம் குறைவாக காணப்படுவதால், கார் சாகுபடிக்கு முழுமையாக தண்ணீர் திறக்கப்படுமா என்ற அச்சம் உள்ளது.

இதனிடையே நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மிதமான மழையால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து இருந்து வருகிறது. இதன் காரணமாக அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

புதன்கிழமை நிலவரப்படி பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1990.86 கனஅடியும், சேர்வலாறு அணைக்கு விநாடிக்கு 1,500 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 8 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 192.16 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 72.98 கனஅடியும், அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 46 கனஅடியும், கருப்பாநதி, குண்டாறு அணைகளுக்கு தலா 10 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.

100 அடியை நெருங்குகிறது:

பாபநாசம் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 65.40 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 2.50 அடி உயர்ந்து 80.54 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 66.50 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 67.00 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 55.21 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 32.48 அடியாகவும், குண்டாறு அணையின் நீர்மட்டம் 36.10 அடியாகவும் இருந்தது.

132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 1.50 அடி உயர்ந்து 98.00 அடியாக இருந்தது. நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மிதமான மழையால் அணையின் நீர்மட்டம் ஒரு வாரத்தில் 13 அடி உயர்ந்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டும் நிலையில் உள்ளது.

தண்ணீர் திறப்பு: பாசனம், குடிநீருக்காக பாபநாசம் அணையில் இருந்து 1105 கனஅடியும், மணிமுத்தாறு அணையில் இருந்து 55 கனஅடியும், கடனாநதி அணையில் இருந்து 105 கனஅடியும், ராமநதி அணையில் இருந்து 40 கனஅடியும், கருப்பாநதி, அடவிநயினார் அணைகளில் தலா 10 கனஅடியும், குண்டாறு அணையில் 8 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.