காவிரியில் தடுப்பணை கட்டும் கர்நாடக அரசின் முடிவைக் கண்டித்து திருச்சியில் ரயில் மறியல் முயற்சி: 1800 பேர் கைது

காவிரியில் மேகதாது,ராசிமணல் ஆகிய இடங்களில் தடுப்பணை கட்டும் கர்நாடக அரசின் முடிவைக் கண்டித்து வியாழக்கிழமை திருச்சியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 72 பெண்கள் உள்பட 1800 பேர்
Updated on
1 min read

காவிரியில் மேகதாது,ராசிமணல் ஆகிய இடங்களில் தடுப்பணை கட்டும் கர்நாடக அரசின் முடிவைக் கண்டித்து வியாழக்கிழமை திருச்சியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 72 பெண்கள் உள்பட 1800 பேர் கைது செய்யப்பட்டனர்.

காவிரியின் குறுக்கே மேகேதாட்டு மற்றும் ராசிமணல் ஆகிய இடங்களில் தடுப்பணை கட்ட கர்நாடக அரசு முடிவெடு்த்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் முற்றிலும் தடைப்பட்டு டெல்டா உள்ளிட்ட 20 மாவட்டங்களில் விவசாயம் செய்யமுடியாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. கர்நாடக அரசின் இந்த முடிவை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீடு ஒழுங்குமுறைக் குழுவை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி 4-ம் தேதி ரயில் மறியல் மற்றும் சாலை மறியலில் ஈடுபட போவதாக கம்யூனிஸ்ட் கட்சிகளின் விவசாய அமைப்பினர் அறிவித்திருந்தனர்.

இவர்களின் போராட்டத்துக்கு திமுக, மதிமுக, காங்கிரஸ், பாமக, தமாக, விடுதலை சிறுத்தைகள், எஸ்டிபிஐ மற்றும் தமிழர் அமைப்பினர்கள் ஆதரவு தெரிவித்து அந்த போராட்டத்தில் பங்கேற்க முடிவெடுத்தனர். அதன்படி திருச்சியில் வியாழக்கிழமை காதிகிராப்ட் அருகே திரண்ட மேற்கண்ட கட்சியினர் அங்கு முழக்கமிட்டு அங்கிருந்து திருச்சி ரயில்வே ஜங்ஷனுக்கு ரயிலை மறிக்கச் சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கன்டோன்மென்ட் போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

முன்னாள் அமைச்சரும் திமுக மாவட்டச் செயலாளருமான கே.என்.நேரு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அன்பில் பெரியசாமி, முன்னாள் துணை மேயர் அன்பழகன், மதிமுக புறநகர் மாவட்ட பொறுப்பாளர் டி.டி.சி.சேரன்,மாநகர பொறுப்பாளர் சோமு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸட் கட்சி மாவட்டச் செயலர் எஸ்.ஸ்ரீதர்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் இந்திரஜித், காங்கிரஸ் கட்சி மாநகர மாவட்ட தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ்,தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜசேகரன், விடுதலை சிறுத்தை கட்சியின் புறநகர் மாவட்டச் செயலர் தமிழாதன், எஸ்டிபிஐ மாவட்டச் செயலர் ரஹமத்துல்லா உள்ளிட்ட கட்சியைச் சேர்ந்த 72 பெண்கள் உள்பட 1800 பேர் கைது செய்யப்பட்டு அருகிலுள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com