கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி.தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சியைச் சேர்ந்தவர்களுக்கு கடந்த பிப்.14-ம்தேதி ஓமக்குளம் சுபம் திருமண மண்டபத்தில் விலையில்லா மிக்சி, கிரைண்டர், ஃபேன் வழங்கும் நிகழ்ச்சி வட்டாட்சியர் விஜயா, குமராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கே.ஏ.பாண்டியன் ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது. இருநாட்களாக விலையில்லா மிக்சி, கிரைண்டர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொன்னாங்கன்னிமேடு, ஓமக்களும் பகுதியைச் சேர்ந்த மக்கள் விடுபட்ட தங்களுக்கும் மிக்சி, கிரைண்டர், ஃபேன் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை காலை விலையில்லா பொருள்கள் வழங்கி வரும் திருமண மண்டபத்தை பூட்டி, சிதம்பரம்-காட்டுமன்னார்கோயில் செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.