நாட்டு மக்களுக்கு அனைத்து திட்டங்களும் கிடைக்க ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்றார் போக்குவரத்து துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி.
கரூரில் நகர அதிமுக சார்பில் தமிழக முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, மேலும் அவர் பேசியதாவது:
தமிழக முதல்வர் ஏழை மக்களின் வாழ்வின் தரம் உயர பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். இத்தகைய திட்டங்களை எல்லாம் தமிழக மக்கள் பெற்று பயனடைவது போல, இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில், இந்த நாளில் நாம் உறுதி கொள்ள வேண்டும் என்றார். கரூர் எம்.பி.தம்பிதுரை பேசுகையில், தற்போது நாட்டில் விலைவாசி உயர்ந்துள்ளது. இதனைக் கண்டித்து, காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்தபோதும் கருணாநிதி குரல் எழுப்பவில்லை. இப்போதும் குரல் எழுப்பவில்லை. மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கோ, தமிழகத்தில் இருந்து சென்ற மத்திய அமைச்சர் சிதம்பரத்துக்கோ தமிழக நலனில் அக்கறை இல்லை என்றார்.
முன்னதாக கூட்டத்துக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஏ.ஆர். காளியப்பன் தலைமை வகித்தார். நகர செயலாளர் நெடுஞ்செழியன் வரவேற்றார். கரூர் தொகுதி செயலாளர் எஸ்.திருவிகா, நகர்மன்ற தலைவர் செல்வராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஆரியூர் பி.சுப்ரமணியன், சிவசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் 1,166 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.