கரூர் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு வெள்ளிக்கிழமை மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவரை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே உள்ள மூலிமங்கலம் செம்மடை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கம்(61). இவரது மனைவி பிச்சையம்மாள்(55). சிவலிங்கம் புகளூர் காகித ஆலையில் தொழிலாளியாக வேலைப்பார்த்து ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் ஆகியோர் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர். சிவலிங்கம் தனது மனைவியின் நடத்தை மீது கடந்த சில மாதங்களாகவே சந்தேகப்பட்டு வந்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை இதுதொடர்பாக அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சிவலிங்கம் வீட்டில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியால் மார்பு உள்ளிட்ட இடங்களில் சராமரியாக குத்தினார். இதில் அவர் சம்பவ இடத்திலே இறந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் காவல்நிலைய ஆய்வாளர் கணேஷ் சம்பவ இடத்திற்கு சென்று பிச்சையம்மாளின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் சிவலிங்கத்தை கைது செய்து விசாரித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.