கடலூரில் வண்டி, மாடுகளுடன் தொழிலாளர்கள் மறியல் போராட்டம்

மணல் குவாரிகளை மீண்டும் திறக்ககோரி மாடு மற்றும் வண்டிகளுடன் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் கடலூர் நகரில் 1 மணி நேரத்திற்கும் மேல் கடும்
Updated on
2 min read

மணல் குவாரிகளை மீண்டும் திறக்ககோரி மாடு மற்றும் வண்டிகளுடன் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் கடலூர் நகரில் 1 மணி நேரத்திற்கும் மேல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் அரசு அனுமதி பெற்ற மணல் குவாரிகள் கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வந்தது. இதில் கண்டரக்கோட்டை தவிர அனைத்து குவாரிகளும் பொதுப்பணித்துறையின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வந்தது.பசுமை தீர்ப்பாயம் உத்தரவின் பேரில் தமிழக அரசு நடவடிக்கையால் அனைத்து குவாரிகளும் திடீரென மூடப்பட்டது. 4 மாதமாகியும் மாவட்டத்தில் மணல் குவாரிகள் திறப்பிற்கு நடவடிக்கை மேற்கொள்ளாததால் 20 ஆயிரம் கட்டுமான மற்றும் மாட்டு வண்டிகள் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கட்டுமான தொழில் முடங்கியுள்ளது.குவாரிகளை பொதுப்பணித்துறையின் நேரடி கட்டுப்பாட்டில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ள மாட்டு வண்டி மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தொடர் போராட்டம் நடத்தியும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. மேலும் தடையை மீறி மணல் அள்ளிய சுமார் 2,000 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மறியல் போராட்டம்: போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறிய கடலூர் நகர்

மாட்டு வண்டி மணல் குவாரிகளை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தியும் பலனில்லாத நிலையில், கடலூர் உழவர் சந்தை அருகில் புதுச்சேரி சாலை சந்திப்பில் தொழிலாளர்கள் மாட்டு வண்டிகளை நிறுத்தி மறியல் போராடத்தில் ஈடுபட்டனர். காலை 10 மணிக்கு தொடங்கிய போராட்டம் ஒரு மணி நேரத்துக்கும் மேல் நீடித்தது. இதனால் சிதம்பரம் சாலை, புதுச்சேரி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதனைத்தொடர்ந்து போலீஸார் மாட்டு வண்டிகளை போலீஸார் ஓட்டிச்சென்று அருகில் உள்ள ஜவான் பவான் சாலையில் நிறுத்தினர். ஆனாலும் தொழிலாளர்கள் மறியலை கைவிட மறுத்தனர்.

அப்போது அங்கு வந்த புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் ஜெயசீலன் வரும் 30ஆம் தேதி சென்னையில் உள்ள பசுமை தீர்ப்பாய அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளது. கடலூர் மாவட்டத்தில் 30 இடங்களில் மணல் குவாரிகள் திறக்க அனுமதி கோரப்படும்.

இதில் பசுமை தீப்பாயம் அனுமதி அளிக்கும் இடங்களில் வரும் பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் மாட்டு வண்டி மணல் குவாரிகள் திறக்கப்படும். இந்த காலக்கெடுவுக்கு முன்னர் லாரிகளுக்கு குவாரிகள் திறக்கப்பட்டாலும் இருந்தாலும் அதே குவாரியின் ஒரு பகுதியில் மணல் அள்ளிக்கொள்ள அனுமதி வழங்கப்படும் என்றார்.

இதனை எழுத்தி வடிவத்தில் அளித்தால் மட்டுமே போராட்டம் விலக்கிக்கொள்ளப்படும் என தொழிலாளர்கள் அறிவித்தனர். இதனையடுத்து புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் ஜெயசீலன், இந்த உறுதிமொழியை எழுதிக்கொடுத்தார். இதனையடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

மறியல் போராட்டம் 11.30 மணி அளவில் விலக்கிக்கொள்ளப்பட்டாலும், 12.30 மணி வரை போக்குவரத்து நெரிசல் சீரடையவில்லை.

கைது செய்ய முடியாமல் திணறிய போலீஸார்:

மறியல் செய்ய முயன்றவர்களை கைது செய்வது போலீஸாரின் வழக்கமான நடைமுறையாக உள்ளது. மாடு மற்றும் வண்டிகளுடன் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், கைது செய்ய முடியாமல் போலீஸார் திணறினர். தொழிலாளர்களை கைது செய்யும் பட்சத்தில் வண்டியோடு மாடுகளையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். அதனால் தான் தொழிலாளர்களை கைது செய்யவில்லை என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com