கடைசி இடத்திலிருந்து கடலூர் மாவட்டத்தை மீட்க கல்வித்துறை புதிய முயற்சி

கடந்த ஆண்டில்(2013)10 ஆம் வகுப்பு மாணவர் தேர்ச்சி எண்ணிக்கையில் மாநிலத்திலேயே கடைசி இடத்தில் இருந்த கடலூர் மாவட்டத்தை இந்த ஆண்டில் மீட்டெடுக்க கல்வித்துறை புதிய முயற்சியை
கடைசி இடத்திலிருந்து கடலூர் மாவட்டத்தை மீட்க கல்வித்துறை புதிய முயற்சி
Updated on
2 min read

கடந்த ஆண்டில்(2013)10 ஆம் வகுப்பு மாணவர் தேர்ச்சி எண்ணிக்கையில் மாநிலத்திலேயே கடைசி இடத்தில் இருந்த கடலூர் மாவட்டத்தை இந்த ஆண்டில் மீட்டெடுக்க கல்வித்துறை புதிய முயற்சியை தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் பழமையான மாவட்டங்களில் ஒன்றான கடலூர் மாவட்டம் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இதனால், மாவட்ட மக்களின் பொருளாதாரமும் மிகவும் பின்தங்கியுள்ளது. கடலூர் மாவட்டம் 2013-ஆம் ஆண்டில் பிளஸ்2 தேர்வில் 72.79 சத தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 30-வது இடத்தை பிடித்தது. 10-ம் வகுப்பு தேர்வில்,75.21 சத தேர்ச்சி பெற்று கடலூர் மாவட்டம் மாநிலத்தில் கடைசி இடத்தை(31-வது இடம்) பிடித்தது.இந்த மோசமான தேர்ச்சி சதவீதத்துக்கு காரணம் அரசுப்பள்ளிகள்தான். கடலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்வெழுதிய 225 அரசுப்பள்ளிகளில் 10 பள்ளிகளில் மட்டும் தான் 100 சத தேர்ச்சி பெற்றன.

இந்த மோசமான நிலைக்கு காரணம் ஆசிரியர்கள் என கல்வி ஆர்வலர்களும், பெற்றோர்களின் கவனி்ப்பு இல்லாமை, மாணவர்களின் ஆர்வம் இல்லாமையே தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளதற்கு காரணம் என கல்வித்துறை அதிகாரிகளும் பரஸ்பரம் கு்ற்றம்சாட்டிக்கொண்டனர்.இந்த நிலையில் தேர்ச்சி சதவீத்ததை அதிகரிக்க அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ்2, 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு, மாதாந்திர தேர்வுகள் போன்ற முன் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

இப்போது சூழலில் தேர்ச்சி பெறுவது கடினம் என்ற நிலையில் உள்ள மாணவர்களை குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் எடுக்கவைக்கும் வகையில் வினா, விடை தொகுப்பு பயிற்சி புத்தகத்தை, நன்கொடையாளர்களின் உதவியுடன் மாவட்ட கல்வித்துறை தயாரித்துள்ளது.

பிளஸ்2 தேர்வு எழுதும் மாணவர்களில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு இந்த புத்தகங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. அந்த புத்தகத்தை கொண்டு மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர்.இந்த நிலையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இதேபோன்று வினா, விடை தொகுப்பு புத்தகம் வழங்கப்படவுள்ளது. என்எல்சி நிதி உதவியுடன் ரூ.2.5 லட்சம் செலவில் 3,500 புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளது.மாவட்டத்தில் உள்ள 287 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு இந்த புத்தகங்கள் வழங்கப்பட்டு, மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள 10 ஆம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

தமிழ் பாடத்தில் தேர்ச்சி குறைவு:

அரையாண்டு தேர்வு வரையில் எடுக்கப்பட்ட ஆய்வில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள 10 ஆம் வகுப்பு மாணவர்களில் பலர் ஆங்கிலம், தமிழ், கணித பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பாடங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, இந்த பயிற்சி புத்தகம் மூலம் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. முதல் முறையாக இந்த ஆண்டில்தான் இந்த முயற்சியை தொடங்கியுள்ளோம், இதன் மூலம் தேர்ச்சி சதவீதம் அதிகாரிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சி.ஜோசப் அந்தோணிராஜ்.

வினா, விடை புத்தகம் வெளியீடு:

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வினா விடை புத்தகத்தை, ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார், திங்கள்கிழமை வெளியிட்டார்.மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சி.ஜோசப் அந்தோணிராஜ் உடனிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com