சிதம்பரம் தில்லைக்காளிக்கோயில் தெப்பக்குளத்தில் கல்வெட்டுகள் கண்டெடுப்பு!
பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஸ்ரீதில்லைக்காளியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனின் கல்வெட்டுகள் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்று ஆய்வாளர்களால்


பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஸ்ரீதில்லைக்காளியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனின் கல்வெட்டுகள் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்று ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயில் தெப்பக்குளத்தில், அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை துணைப் பேராசிரியர்களும், திராவிட வரலாற்று ஆய்வுக்கழக ஆய்வாளர்களுமான இல.கணபதிமுருகன், ஆ.முத்துக்குட்டி ஆகியோர் களஆய்வு செய்தனர். அப்போது இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனின் கல்வெட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்ததாவது:
முதல் கல்வெட்டு தெப்பகுளக்கரையின் தென்புறம், கீழிருந்து மேலாக மூன்றாவது படிக்கட்டிலும், இரண்டாவது கல்வெட்டு கிழக்குப்புற படிக்கட்டில் கீழிருந்து மேலாவது மூன்றாவது படிக்கட்டிலும் காணப்படுகிறது. "கோப்பெருஞ்சிங்க தேவர்க்கு யாண்டு 10 ஆவது (கிபி 1253)" எனத் தொடங்கும் முதல் கல்வெட்டானது, கண்டராதித்த வாய்க்காலுக்கு அருகாமையில் இருந்த நிலத்தை விற்று காளிதேவிக்கு தர்மம் செய்யக்கடவதாக! என்ற செய்தியை குறிக்கிறது. இரண்டாவது கல்வெட்டு கமுகு, மா, பலா, வாழை போன்றவை பயிரிட்டு அதன் வாயிலாக வரும் வருவாயை தானமாக அளித்ததை குறிப்பிடுகிறது.
திருச்சிற்றம்பல மாகாளி:
தில்லைக் காளியம்மன் கோயிலை பொறுத்தமட்டில் காடவர் குலத்தைச் சேர்ந்த முதலாம், இரண்டாம் கோப்பெருஞ்சிங்க மன்னர்களே இன்றைய காலக்கட்டத்தில் காணப்படும் கோயிலின் முழுமையான கட்டுமானத்தை உருவாக்கியவர்கள் ஆவார்கள். தில்லையம்மன் கோயிலில் நான்முகியாக அருள்பாலிக்கும் தேவியின் சொரூபத்தை பிரதிஷ்டை செய்வதன் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் ஆவான், கிழக்கு நோக்கிய திசையில் உக்கிரமாக் காளியாக காட்சியளிக்கும் அன்னையின் சொரூபம் சோழர்களின் கலைப்படைப்பாகும். உக்கிரமாகாளியே, திருச்சிற்றம்பல மாகாளி என கல்வெட்டுகளில் குறிக்கப்படுகின்றன. இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனின் எட்டாவது ஆட்சியாண்டில்தான் தில்லைக்காளியம்மன் கோயிலை கற்றளியாக மாற்றும் பணி தொடங்கப்பெற்று பத்தாவது ஆட்சியாண்டில் நிறைவுற்றது.
இடம்பெயர்ந்த கல்வெட்டுகள்:
இந்திய தொல்லியல்துறை 1903-ம் ஆண்டு வெளியிட்ட ஆண்டு அறிக்கையில் இக்கல்வெட்டுடன் தொடர்புடைய ஒரு கல்வெட்டு பற்றிய விபரம் உள்ளது. அதனைக் கொண்டு நோக்குகையில் இவ்விரண்டு கல்வெட்டுகளும் தில்லைக் காளியம்மன் தேவகோட்டத்தில் காணப்படும் கல்வெட்டின் தொடர்ச்சியே எனலாம். பிற்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆலய புனரமைப்பின் போது இக்கல்வெட்டு தெப்பக்குளத்திற்கு இடம் பெயர்ந்துள்ளது. அதேபோல இவ்வாலயத்தின் பரிவார கணபதியாக இருந்த விநாயகர், கோயிலின் வெளிப்புற பிரகார தென்கிழக்குமூலையில் கவனிப்பாரற்று காட்சியளிக்கிறார் என்பது எங்கள் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...