சிதம்பரம் அருகே கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து திருப்பி கேட்டு வீட்டில் சிறைவைக்கப்பட்ட பெண் உள்ளிட்ட மூவரை புவனகிரி போலீஸார் மீட்டனர். கந்துவட்டிக்கு பணம் கொடுத்து சிறை வைத்த ஆசாமியை போலீஸார் கைது செய்தனர்.
சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (70). இவர் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கி வருகிறார். இந்நிலையில் புவனகிரியைச் சேர்ந்த ஷேக்உசேன் (40), தாகீராபேகம் (58) ஆகிய இருவரும் உறவினர் ஒருவருக்கு ராதாகிருஷ்ணனிடம் இருந்து சில வருடங்கள் முன்பு ரூ.25 ஆயிரம் தொகை கடனாக பெற்று தந்துள்ளனர். பின்னர் ஷேக்உசேன், தாகீராபேகம் ஆகியோர் புதுச்சேரி உப்பளம் பகுதியில் குடியேறியுள்ளனர். இந்நிலையில் ஷேக்உசேன், தாகீராபேகம் ஆகியோர் கார் டிரைவர் தஸ்தகீருடன் காரில் புவனகிரியில் உள்ள வங்கிக்கு வியாழக்கிழமை காலை வந்துள்ளனர். இதனையறிந்த ராதாகிருஷ்ணன் அவர்களை வழிமறித்து வீட்டிற்கு அழைத்துச் சென்று ஒரு அறையில் போட்டு பூட்டி வைத்து சிறை பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து டிரைவர் தஸ்தகீர் புவனகிரி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்ராஜ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சிறைபிடித்து வைக்கப்பட்டிருந்த ஷேக்உசேன், தாகீராபேகம் உள்ளிட்ட 3 பேரையும் மீட்டனர். பின்னர் புவனகிரி போலீஸார் வழக்குப் பதிந்து சிறைபிடித்த ராதாகிருஷ்ணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.