திருநெல்வேலி அருகே காரை முந்தி செல்ல முயன்றபோது, சாலையோரமாக நின்ற லாரி மீது கார் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த கேரளாவை சேர்ந்த இருவர் சம்பவ இடத்திலே இறந்தனர். டிரைவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கேரளா மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம், பாப்பனங்கோடு புதுவழி புத்தன்வீடு பகுதியை சேர்ந்த ராஜேஷ் (52), இதே பகுதியை சேர்ந்த சசி (50). இருவரும் விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். காரை பாப்பனங்கோடு பகுதியை சேர்ந்த சந்திரன் மகன் அருண் (32) என்பவர்
ஓட்டினார்.
திருநெல்வேலி அருகே கங்கைகொண்டான் அகதிகள் முகாம் அருகில் வந்தபோது, மாருதி காரை முந்தி செல்வதற்காக அருண் காரை வேகமாக ஓட்டினாராம். அப்போது மாருதி காரில் உரசிய கார் சாலையோரமாக நின்ற லாரி மீது மோதி கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கார் முற்றிலும் சேதமடைந்தது. காரில் பயணம் செய்த சசி, ராஜேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த டிரைவர் அருணை போலீஸார் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து கங்கைகொண்டான் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.