இந்தியாவை சீர்குலைக்க பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்புகள் இலங்கையில் பயிற்சியை பெற்று, இலங்கையிலிருந்து தமிழகம் வழியாக இந்தியாவுக்குள் நுழைகிறார்கள் என்று பா.ஜ.க, தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் குற்றம்சாட்டி உள்ளார்.
திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இல. கணேசன், இது இலங்கை அரசுக்கும் தெரியும் தமிழக அரசுக்கு தெரியும், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாகவே இதை தெரிவித்தேன். இந்த நிலையில் நான்கு நாட்களுக்கு முன்பாக பயங்கரவாதி ஜாகிர் உசேன் கைது செய்யப்பட்டிருப்பது நான் சொன்ன குற்றச்சாட்டு உண்மை என்று நிரூபித்துள்ளது.
இவரை போன்று இன்னும் பலரும் இந்தியாவுக்குள் வரலாம்.எனவே இதை தடுப்பதற்கான முயற்சியை மத்திய - மாநில அரசுகள் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.
சென்னையில் நடந்த குண்டு வெடிப்பு மோடியை குறி வைத்து மோடியின் பிரசாரத்தின் போது பீதியை உருவாக்க வேண்டும் என்பதற்காக நடந்த சதித் திட்டமாக நாங்கள் கருதுகிறோம்.
மோடி பிரதமரானவுடன் பயங்கரவாத பயிற்சி இலங்கையில் நடைபெறுவது தடுக்கப்படும். தேச விரோத சக்திகளை ஒடுக்கும் போது மத்திய, மாநில அரசுகள் என்றோ மாறுப்பட்ட கருத்துக்களை கொண்ட கட்சிகள் என்றோ, பாகுபாடுகள் இன்றி சேர்ந்து செயல்படவேண்டும். இது போன்ற வெடிகுண்டு தாக்குதல் இனிமேல் நடக்கக்கூடாது.
தமிழகத்தில் திமுக - அதிமுக எதிரான வெறுப்பு பாஜக அணியின் மீது மக்கள் கொண்டிருக்கின்ற ஆதரவு ஆகியவை வெளிவர உள்ள தேர்தல் முடிவுகளில் தெரியும்.
காத்திருந்து காத்திருந்து பொறுமையுடன் உருவான இந்த அணி தமிழ்நாட்டில் தொடரும். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் சிறப்பாக இருந்தாலும் பணப்பட்டுவாடாவை தடுக்கின்ற நடவடிக்கைகளில் சில குறைபாடுகள் இருக்கின்றன.
தேர்தல் முடிந்து மீண்டும் அதே ஆளும் கட்சியிடம் வேலை பார்க்க வேண்டிய நிலை அதிகாரிகளுக்கு இருப்பதால் சில இடங்களில் பணப் பட்டுவாடாவை தடுக்க முடியவில்லை. ஆணையத்தின் தேர்தல் நடைமுறைகளில் உள்ள குறைபாடுகள் களையப்பட்டால் இன்னும் சிறப்பாக தேர்தல் நடத்த முடியும் என்று இல. கனேசன் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.