விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டில் மனைவியுடன் தூங்கிக் கொண்டிருந்த கிராம நிர்வாக அலுவலரை ஞாயிற்றுக்கிழமை அரிவாள் முனையில் மிரட்டி, அவர் மனைவி அணிந்திருந்த தாலி செயின் உள்ளிட்ட 25 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற 5 நபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர்-ராஜபாளையம் சாலையில் மடவார்வளகத்தை அடுத்து வன்னியம்பட்டி விலக்குக்கு முன்னால் குடியிருந்து வருபவர் க.பழனிச்சாமி. இவர் மம்சாபுரம்-வாழைக்குளம் கிராம நிர்வாக அலுவலராக உள்ளார். இவரது மனைவி தனுஷ்கோடி. இவர்களின் இரு மகன்களும் வெளியூரில் உள்ளார்கள்.
சனிக்கிழமை இரவு வீட்டின் அனைத்து கதவுகளையும் பூட்டிவிட்டு, உள் அறையில் ஏ.சி. போட்டு தூங்கிக் கொண்டிருந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி அளவில் பழனிச்சாமியின் காலை யாரோ கட்டுவது போல இருந்துள்ளது. இதனையடுத்து அவர் எழுந்திருக்க முயற்சித்துள்ளார். கண் விழித்துப் பார்த்த போது 5 இளைஞர்கள் முகமுடி அணிந்து, ஒருவன் கையில் அரிவாளுடனும், ஏனைய 4 பேரும் கத்தியுடனும் படுக்கை அறையில் நின்று கொண்டிருந்துள்ளார்கள். அரிவாளுடன் வந்த நபர் பழனிச்சாமியை மிரட்ட, ஏனைய நால்வரும் அவரது மனைவியை மிரட்டியுள்ளனர். நிலைமையை புரிந்து கொண்ட பழனிச்சாமி பீரோ எல்லாம் திறந்துதான் உள்ளது எல்லாவற்றையும் எடுத்துக்கொள் என்று கூறியுள்ளார்.
தனுஷ்கோடி தான் அணிந்திருந்த தாலி செயின், வளையல்கள், மூக்குத்தி, கம்மல் உள்ளிட்டவற்றை கழற்றி கொடுத்துள்ளார். மேலும் இருந்த நகைகளும் சேர்த்து சுமார் 25 பவுன் நகைகளை கொள்ளையர்கள் எடுத்துக் கொண்டுள்ளனர். மேலும் பழனிச்சாமியிடம் நீ போட்டிருந்த செயினை எங்கே என்று கேட்டுள்ளார்கள். அவர் நான் செயின் போடமாட்டேன் என்று கூறியுள்ளார்.
மேலும் பழனிச்சாமி கொள்ளையன் கையில் இருந்த அரிவாளை பறிக்க முயன்றபோது, அவரது கையில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் செல்போனில் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொள்வது போல பழனிச்சாமி பேசியுள்ளார். இதனையடுத்து வந்த கொள்ளையர்கள், தாங்கள் வந்த காரில் தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து போலீஸார் கூறியதாவது: இவர்களது வீடு தனியாக உள்ளது. அருகே வாட்டர் சர்வீஸ் பண்ணும் இடம் உள்ளது. பல நாட்களாக வீட்டை கண்காணித்த கொள்ளையர்கள் காரில் வந்து வீட்டின் சுற்றுச் சுவரில் உள்ள கேட்டை ஏறி குதித்து உள்ளே நுழைந்துள்ளார்கள்.