இடதுசாரிக் கட்சிகள் நடத்தி வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகின்றன என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்செயலர் ஜி.ராமகிருஷ்ணன்.
கடலூரில் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
உள்ளாட்சி மன்றங்கள் மக்களோடு நெருக்கமாக இருக்கக்கூடிய அமைப்புகளாகும். இவ்வமைப்புகள் சுயேச்சையாக, ஜனநாயகப்பூர்வமாக செயல்பட வேண்டும். தமிழகத்தில் இவ்வமைப்புகளை ஜனநாயகப்பூர்வமாக செயல்பட ஆளுங்கட்சி அனுமதிக்கவில்லை. இந்த அமைப்புகளில் காலி இடங்கள் ஏற்பட்டால் ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பது உள்ளாட்சி மன்ற சட்டமாகும். தமிழகத்தில் அதிமுக அரசு பல அமைப்புகளுக்கு ஆறு மாதங்களுக்குள் தேர்தலை நடத்தாதது மட்டுமல்ல, நடத்தும் தேர்தலையும் ஜனநாயகப் பூர்வமாக நடத்தவில்லை.
எதிர்க்கட்சிகளுக்கு தேர்தல் தயாரிப்புக்கு வாய்ப்புகொடுக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் தேர்தல் தேதி அறிவித்த கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி அன்றே,வேட்புமனுத்தாக்கல் துவங்கிடும் என அறிவித்தது. இது ஜனநாயக நடைமுறைக்கு எதிரானது. வேட்புமனுத்தாக்கல் செய்கிற போது, புதுக்கோட்டை உள்ளிட்ட பல இடங்களில் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கலே செய்ய விடாமல் ஆளுங்கட்சியினர் அராஜகம் செய்தனர். வேட்புமனுத்தாக்கல் செய்த பல இடங்களில் எதிர்கட்சியினரின் மனுக்கள், ஆளுங்கட்சியினரின் நிர்ப்பந்தத்தால் மோசடியாக நிராகரிக்கப்பட்டன.திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம் வார்டு கவுன்சிருக்கான தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரின் வேட்புமனு முறைகேடாக நிராகரிக்கப்பட்டதை எதிர்த்துப் போராடியதால் அந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், மற்ற பல இடங்களில் ஆளுங்கட்சியின் அராஜகமும், மோசடியுமே நடந்தேறியது.
இந்த நிலையில் பல இடங்களில் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்வதற்கான ஏற்பாடுகளை ஆளுங்கட்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தலில் ஜனநாயகத்தின் குரல்வளையை ஆளும் கட்சி நெரிக்கிறபோது, விலகி நின்று வேடிக்கை பார்க்கக்கூடாது என்ற நோக்கத்துடன் வாய்ப்புள்ள இடங்களில் இடதுசாரிகள் போட்டியிடுகின்றன.மத்திய அரசிடமிருந்து மாநிலத்திற்கு அதிக அதிகாரமும், அதிக நிதிஒதுக்கீடும் கோரும் அதிமுக தலைமை, உள்ளாட்சி மன்றங்களுக்கு உரிய அதிகாரங்களை வழங்க மறுப்பதுடன், போதிய நிதியும் ஒதுக்கீடு செய்வதில்லை. அந்த அமைப்புகளுக்கான தேர்தலையும் ஜனநாயகப்பூர்வமாக அதிமுக அரசு நடத்த விரும்பவில்லை.
தமிழகத்தில் தொழில் மற்றும் விவசாய வளர்ச்சி தேசிய சராசரியை விட குறைவாக இருப்பதுடன், பல மாநிலங்களை விட கடந்த ஆண்டில் பின்தங்கியுள்ளது. இயற்கை வளங்களான கிரானைட், மணல், தாதுப்பொருட்கள் கொள்ளை போகின்றன. விலைவாசி உயர்வு ஏழை, எளிய மக்களை வாட்டி வதைக்கிறது. மணல் கொள்ளை தொடர்ந்துநீடித்து வருகிறது. சட்டம், ஒழுங்கு தறிகெட்டு இருக்கிறது. குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
மத்தியில் ஆளும் பாஜக அரசின் மக்கள் விரோத, பொருளாதார கொள்கைகளை எதிர்த்தும், மதவாதத்தை எதிர்த்தும் இடதுசாரிக் கட்சிகள் தொடர்ந்து போராடி வருகின்றன. தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசின் மக்களை பாதிக்கக்கூடிய நடவடிக்கைகளை எதிர்த்தும் இடதுதுசாரிகள் தொடர்ச்சியாக பல்வேறு இயக்கங்களை நடத்தி வருகின்றன.
இடதுசாரிகள் நடத்தி வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகின்றன. ஜனநாயகத்தைப் பாதுகாக்க, உள்ளாட்சி மன்றங்கள் சுயாட்சி மன்றங்களாகச் செயல்பட உள்ளாட்சி இடைத்தேர்தலில் வாக்காளர்கள் இடதுதுசாரி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.
இதன்பிறகு கடலூர் நகர்மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஜி.மாதவனுக்கு ஆதரவாக கடலூர் சிஐடியு அலுவலகம் தொடங்கி பல்வேறு இடங்களில் ஜி.ராமகிருஷ்ணன் வாக்குசேகரித்தார். கட்சியின் மாவட்ட செயலர் டி.ஆறுமுகம், நகர செயலர் வி.சுப்புராயன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.