திருச்சியில் போலி ஏ.ஏ.எம். கார்டுகள் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட 8 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீஸார் புதன்கிழமை நள்ளிரவு உடையான்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது தென்றல் நகரிலுள்ள ஒரு ஏ.டி.எம் மையம் முன்பு இரண்டு சொகுசு காரில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 8 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறியுள்ளனர். இதையடுத்து போலீஸார் அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அங்கு விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் காஜாமலை, ஆர்.வி.எஸ் நகரைச் சேர்ந்த இலங்கை தமிழர் பிரசாத் (28), ஐயப்ப நகரைச் சேர்ந்த இலங்கை தமிழர் சுமன் (27), கமலநாதன் (28), தேவதானம், மூவேந்தர் நகர், காவிரி சாலையைச் சேர்ந்த மில்டன் கணேசன் (29), ஸ்ரீரங்கம், லட்சுமி நரசிம்மர் தெருவைச் தேர்ந்த ஆனந்தகுமார் (27), புத்தூர், சீனிவாசநகரைச் சேர்ந்த இளமாறன் (29), பெல் நகரியம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்வரன் (24), விமான நிலையம் அருகேயுள்ள காமராஜ் நகரைச் சேர்ந்த கார்த்திக் (28) ஆகியோர் என்பதும், இவர்கள் அனைவரும் லண்டனில் உள்ள சூர்யா என்பவர் மூலம் வெளிநாடுகளில் வசிக்கும் ஏ.டி.எம். வாடிக்கையாளர்களின் எண்களை தெரிந்துக்கொண்டு போலி ஏ.டி.எம் கார்டுகள் தயாரித்து மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் மேற்கண்ட அந்த 8 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டு சொகுசு கார்கள், 12 செல்போன்கள், 60-க்கும் மேற்பட்ட ஏடிஎம் கார்டுகள், ரூ.2 லட்சம் ரொக்கம்,7 பவுன் நகை உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.