மலைக்கோயிலில் அதிகாலை 4 மணிக்கு சன்னதி திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி நடத்தப்பட்டு மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தமிழகத்தின் பல பகுதியில் இருந்தும் பக்தர்கள் பால்காவடி, மயில்பீலிகாவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்திருந்தனர். மலைக்கோயிலில் உள்ள போகர் சன்னதியில் புத்தாண்டை முன்னிட்டு மரகதலிங்கத்துக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி, தயிர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரமும், தொடர்ந்து சிறப்பு தீபாராதனையும் செய்யப்பட்டது. மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் பழனி திருமுருக பக்த சபா சார்பில் நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவு விழாவில் நல்லாசிரியர் திருமலைசாமி, தேவி உள்ளிட்டோர் பல்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்தினர். 108 திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. அடிவாரம், சன்னதி வீதிகளிலும், கிரிவீதியிலும் பக்தர்கள் கூட்டம் நிறைந்திருந்த நிலையில் போதிய போலீஸார் போக்குவரத்தை கண்காணிக்க நிறுத்தப்படாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அய்யம்புள்ளி சாலையில் சுமார் ஒரு கி.மீ தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இரவு நடைபெற்ற தங்கரத புறப்பாட்டிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சின்னக்குமாரரை தரிசித்து பரவசமடைந்தனர்.