அம்பத்தூர் கள்ளிகுப்பம் சாலை துளசி தெருவில் வசிப்பவர் மைகேல்ராஜ். இவர் வடக்கு பூங்கா சாலையில் தேநீர்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஆரோக்கிய வனிதா(25). இவர்களுக்கு டேனிஷ் (5) என்ற மகனும், பிரியங்கா(2) என்ற மகளும் உள்ளனர்.
வழக்கம் போல் மைகேல்ராஜ், திங்கட்கிழமை இரவு 12.30 மணியளவில் கடையை மூடிவிட்டு வீட்டிற்குச் சென்றார். வீட்டில், மனைவி கொலை செய்யப்பட்டும், மகள், மகன் ஆகிய இருவரும் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டும் இருந்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தார். பின்னர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார்.
அம்பத்தூர் போலீஸார் விரைந்து வந்து ஆரோக்கிய வனிதாவின் உடலை கைப்பற்றி கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் விசாரணை நடத்தியபோது அதே வீட்டின் மாடியில் பொறுத்தியிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியிருந்த படத்தில், மைகேல்ராஜின் தேநீர் கடையில் வேலை செய்துவரும் விக்கி (எ) விக்னேஸ்வரன் (25) வீட்டுக்கு வந்து போயிருந்தது பதிவாகியிருந்தது.
போலீஸார் விரைந்து சென்று தேநீர்கடை ஊழியர்கள் தங்கியிருக்கும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த விக்கியை பிடித்து விசாரித்ததில் கொலைசெய்ததை ஒப்புக்கொண்டான்.
ராமநாதப்புரத்தை சேர்ந்த விக்கி பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊருக்கு செல்வதற்காக கடை உரிமையாளரான மைக்கேல்ராஜிடம் பணம் கேட்டதாகவும், அவர் இல்லை என்று மறுத்ததால் விக்கி மைக்கேல்ராஜின் வீட்டிற்கு சென்று அவரது மனைவி ஆரோக்கிய வனிதாவிடம் பணம் கேட்டதாகவும், அவரும் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த விக்கி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முதலில் ஆரோக்கிய வனிதாவை குத்தியுள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு வெளியில் விளையாடிக் கொண்டிருந்த அவரது குழந்தைகளான டேனிஷ், பிரியங்கா ஆகிய இருவரும் ஓடிவந்தனர். விக்கி இந்த இரண்டு பேரையும் கத்தியால் குத்தினான். பின்னர் வீட்டிலிருந்த இரும்பு பீரோவிலிருந்து ரூ.40 ஆயிரம் ரொக்கம், மற்றும் ஆரோக்கிய வனிதா அணிந்திருந்த 5 சவரன் தங்க நகையையும் கொள்ளையடித்துக் கொண்டு தேநீர் கடையில் வந்து தங்கிவிட்டான் என்று விசாரணையில் தெரியவந்தது.
போலீஸார் மேலும் இந்த கொலையில் விக்கி மட்டும் ஈடுப்பட்டானா..? அல்லது வேறுயாருக்கும் தொடர்புள்ளதா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.