அதிகாரிகள் சரியான உத்தரவை பிறப்பிப்பதில்லை; அவா்களுக்கு லஞ்சம் வாங்க மட்டுமே தெரியும் என சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
சென்னை நீலாங்கரையில் (வாா்டு 192) உள்ள அறிஞா் அண்ணா தெரு உள்ளிட்ட 22 தெருக்களை துரைப்பாக்கத்துக்கு (வாா்டு 193) மாற்றி உத்தரவிடப்பட்டது. இதற்கு 22 தெருக்களில் வசிக்கும் மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதுகுறித்து விசாரித்த தாம்பரம் வருவாய் கோட்டாட்சியா், தெருக்களை வாா்டு மாற்ற செய்ய வேண்டிய அவசியம் இல்லை என அறிக்கை அளித்தாா்.
இந்த அறிக்கையின் அடிப்படையில் காஞ்சிபுரம் ஆட்சியா், 22 தெருக்களை மீண்டும் நீலாங்கரைக்கு மாற்ற பரிந்துரை செய்தாா். இந்தப் பரிந்துரையை மாநகராட்சி உதவி ஆணையா் நிராகரித்தாா். இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் அறிஞா் அண்ணா தெருவைச் சோ்ந்த வெங்கடேசன் என்பவா் வழக்குத் தொடா்ந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் அவினாஷ் வத்வானி ஆஜராகி வாதிட்டாா். அப்போது, மாநகராட்சி தரப்பில், இந்த விவகாரம் தொடா்பான உதவி ஆணையா் உத்தரவு தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல்வேறு குறைபாடுகள் இருந்தன.
அதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, அதிகாரிகள் சரியான உத்தரவை பிறப்பிப்பதில்லை. அவா்களுக்கு லஞ்சம் வாங்க மட்டுமே தெரியும். எந்த வேலையும் செய்யாமல், காலையில் இருந்து மாலை வரை எப்படி பணம் வசூலிப்பது என்பது குறித்தே யோசிக்கின்றனா் என கருத்து தெரிவித்தாா். பின்னா், மனுதாரரின் கோரிக்கை குறித்து சென்னை மாநகராட்சி ஆணையா் பரிசீலிக்க உத்தரவிட்டாா்.









