திருச்சி விமான நிலையத்தில் 2.5 கிலோ தங்கம் பறிமுதல் 6 பெண்கள் உள்பட 12 பேர் பிடிபட்டனர்

திருச்சி விமான நிலையத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை அதிகாலை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 2.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 6 பெண்கள் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
Updated on
1 min read

திருச்சி விமான நிலையத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை அதிகாலை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 2.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 6 பெண்கள் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

மலேசியாவிலிருந்து சென்னை வழியாக திருச்சி வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் திருச்சி வந்தது.  இதில் பயணம் செய்த சிலர் மீது சுங்கத் துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து அதிகாரிகள் அவர்களை சோதனையிட்டனர்.

அப்போது மதுரையைச் சேர்ந்த ரகுமான், ஜமீனா பேகம், ஜபருன்னிசா, ஆயிசா பேகம், சிவகங்கையை சேர்ந்த ரஷ்யா பேகம், மெகர்பானு, இளையாங்குடியைச் சேர்ந்த அமீதா பேகம் ஆகிய 7 பேரும் தங்களது உடைமைகளில் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் 7 பேரும், சிங்கப்பூரிலிருந்து சிலரால் கடத்தி வரப்பட்ட தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் பெற்றுக்கொண்டு அங்கு மலேசியாவிலிருந்து சென்னை வழியாக திருச்சிக்கு வந்த ஏர் - இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்தது தெரியவந்தது.

இதேபோல மலேசியாவிலிருந்து திருச்சிக்கு வந்த மலிண்டோ விமானத்தில் வந்த பயணிகளிடமும் அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது  திருச்சி தெப்பக்குளத்தை சேர்ந்த இப்ராம்ஷா என்பவர் தான் கொண்டு வந்த ஸ்பீக்கர் பாக்சில் மறைத்து வைத்திருந்த 173 கிராம் தங்கத்தையும், சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ரகீம் என்பவர் பியானோவில் மறைத்து வைத்திருந்த 323 கிராம் தங்கத்தையும், திண்டுக்கல் கனி என்பவர் ஊட்டச்சத்து பவுடர் டப்பாவில் மறைத்து வைத்திருந்த 237 கிராம் தங்கத்தையும், சென்னை எல்லீஸ் பகுதியை சேர்ந்த முகமது என்பவர்  தொலைக்காட்சி சர்க்யூட் போர்டில் மறைத்து வைத்திருந்த 201 கிராம் தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதேபோல சனிக்கிழமை அதிகாலை மலேசியாவிலிருந்து திருச்சிக்கு வந்த மலிண்டோ விமான பயணிகளிடம் அதிகாரிகள் சோதனையிட்டதில் அதில் பயணம் செய்த அபுபக்கர் என்பவர் தான் கொண்டுவந்த 5 கரண்டிகளில் தலா 40 கிராம் வீதம் 200 கிராம் தங்கம் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.  அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு நாளில் 12 பேரிடமிருந்து 2.5 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com