சேலம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட இரு சிறுவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் அறிகுறி இல்லை என டீன் மோகன் தெரிவித்தார்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 சிறுவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தை அடுத்த வாழப்பாடி குறிச்சி கோணசெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் சம்பத். இவர் டெய்லராக உள்ளார். இவரது மகன் பிரதாப் (6), அங்குள்ள தனியார் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வருகிறார்.
இவருக்கு கடந்த சில நாள்களாக காய்ச்சல் இருந்து வருகிறது. இதையடுத்து, வாழப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பிரதாப்பை பரிசோதித்த டாக்டர்கள் டெங்கு காய்ச்சலாக இருக்கககூடும் என்ற சந்தேகத்தின்பேரில் அவரை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர்.
அதேபோல திருச்சி மாவட்டம் தொட்டியம் மருதம்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் லாரி டிரைவாக உள்ளார். இவரது மகன் சரண், அங்குள்ள தனியார் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு தீவிர காய்ச்சல் இருந்து வந்தது. இதையடுத்து, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.
இதனிடையே சிறுவர்கள் இருவருக்கும் டெங்கு காய்ச்சல் இருப்பதாக தகவல் வெளியானது.
இதுதொடர்பாக சேலம் அரசு மருத்துவமனை டீன் மோகன் கூறியது:
சேலம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்ட இருவருக்கும் வைரஸ் காய்ச்சல் தான் உள்ளது. அதேபோல இருவருக்கும் டெங்கு காய்ச்சல் அறிகுறி எதுவும் இல்லை. தற்போது நல்ல உடல் ஆரோக்யத்துடன் உள்ளனர். மேலும், இருவருக்கும் டெங்கு காய்ச்சல் இருப்பதாக கூறுவது வெறும் புரளி ஆகும் எனறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.