பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை இவ்விரு அணைகளிலிருந்து 1,700 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தாமிரவருணி பாசனத்தில் தொடர்ந்து மழை பெய்த காரணத்தாலும், தாமிரவருணி ஆற்றில் உபரி நீர் சென்றதாலும் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு அணைகளில் இருந்து குறைந்த அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது மழை இல்லாததால் பாசனம், குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் இருந்து விநாடிக்கு 1,226 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மணிமுத்தாறு அணையில் இருந்து பெருங்கால் பாசனத்திற்கு 30 கனஅடியும், பிரதான கால்வாய் பாசனத் தேவைக்கு 445 கனஅடியும் ஆக இவ்விரு அணைகளில் இருந்து 1,700 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
பாபநாசம் அணையின் நீர்மட்டம் 129.50 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 648.91 கனஅடி நீர்வரத்து இருந்தது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 108.66 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 19 கனஅடி நீர்வரத்து இருந்தது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 131.53 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 50 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 53 அடியாகவும் இருந்தது.