ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நரையன்குளம்-ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் சுற்றுச் சூழல் மன்றம் சார்பில், உலக சுற்றுச் சூழல் நாளையொட்டி வெள்ளிக்கிழமை 33 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் சுற்றுச் சூழல் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் செ.சண்முகநாதன் தலைமை தாங்கினார். ஆங்கில பட்டதாரி ஆசிரியை பா.பாத்திமா ஞானம் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை இ.ஜெஸிந்தா வரவேற்றார்.
பள்ளி வளாகத்தில் முதல் வகுப்பு மாணவிகள் மரக்கன்றுகள் நட்டு விழாவைத் தொடங்கி வைத்தனர். பின்னர் ஒருங்கிணைப்பாளர் செ.சண்முகாநாதன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: இந்த ஆண்டு 700 கோடி மக்களின் கனவுகள், ஒரே பூமி, எச்சரிக்கையுடன் பயன்படுத்துங்கள் என்ற நோக்கத்தில் உலக சுற்றுச் சூழல் நாள் அனுசரிக்கப்படுவதாகக் கூறினார்.
மேலும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் கடந்த சில பத்தாண்டுகளாகவே உலகம் முழுவதிலும் உணரப்படுகின்ற ஒன்றாக இருந்து வருகின்றது. மனித நடவடிக்கைகளால் சூழலில் ஏற்பட்டுவரும் விரும்பத் தகாத மாற்றங்களும், அதனால் ஏற்படுகின்ற பாதகமான விளைவுகளும், இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளன.