ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, திருவண்ணாமலை ஊராட்சி, ஆண்டாள்புரம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட மக்கள் குடியிருந்து வருகிறார்கள். இப் பகுதியில் சந்தானலட்சுமி என்பவருக்குச் சொந்தமான கட்டடத்தில் பி.பழனிச்சாமி என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக சாயப்பட்டறை நடத்தி வருகிறார். குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள இந்த சாயப்பட்டறையில், நூலுக்கு சாயமிடுதல், நூலை வேகவைத்து உலர வைத்தல் போன்ற பணிகள் தினமும் நடைபெற்று வருகிறது. நூலை உலர வைக்கும்போது அதில் கலந்துள்ள வேதிப் பொருளில் இருந்து வரும் துர்நாற்றத்தால் இப் பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதன் அருகில் ஊராட்சி சார்பில் குடிநீர் தொட்டி உள்ளது. சாயப்பட்டறை கழிவுகள் நேரிடையாக தரையிலும், கழிவு நீர் பாதையிலும் விடப்படுவதால், இந்த குடிநீர் தொட்டியிலுள்ள நீர் மாசடைந்து பல்வேறு நோய்த் தொற்றுகளால் இப் பகுதி மக்கள் அடிக்கடி பாதிக்கப்படுகிறார்கள். இந்த இடத்தில் உயிர்களுக்கு மிகவும் ஆபத்து விளைவிக்கக் கூடிய மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய வேதிப் பொருட்களைக் கொண்டு பட்டாசுத் தொழிலுக்கான கரிமருந்து திரியும் தயாரிக்கப்படுகிறது.