புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

தமிழகத்தின் 15 ஆவது சரணாலயம்: நெல்லையில் உதயமானது

தமிழகத்தின் 15 ஆவது வன சரணாலயமாக நெல்லை வன உயிரினச் சரணாலயமாக உருவாக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :12 மார்ச் 2015, 10:53 am

தமிழகத்தின் 15 ஆவது வன சரணாலயமாக நெல்லை வன உயிரினச் சரணாலயமாக உருவாக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்கெனவே இருக்கும் வனச் சரணாலயங்களில் இருந்து மீதமிருக்கும் பசுமை மாறா பகுதிகளை ஒன்றிணைத்து சுமார் 35,673 ஹெக்டர் பரப்பளவில் நெல்லை வன உயிரினச் சரணாலயம் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இப்போது 14 வன உயிரின சரணாலயங்களும், 5 தேசிய பூங்காக்களும், 14 பறவைகள் சரணாலயங்களும், 4 புலிகள் காப்பகங்களும், 4 யானைகள் காப்பகங்களும், 3 உயிர்க்கோள் காப்பகங்களும், ஒரு பாதுகாக்கப்பட்ட ஒதுக்குப் பகுதியும் உள்ளன.

சுற்றுச் சூழலுடன் இணைந்த உயிர்ப் பன்மை செறிந்துள்ள பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மேலாண்மையின் கீழ் கொண்டு வருவதன் மூலம் வன உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரிக்க உகந்த சூழ்நிலை உருவாக்கப்படுகிறது.

எனவே, உயிரியல் முக்கியத்துவம் நிறைந்த பகுதிகளை வன உயிரின சரணாலயமாக ஏற்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் உயிர்ப் பன்மை செறிந்துள்ள பகுதிகளை உள்ளடக்கி தமிழ்நாட்டின் 15 ஆவது வன உயிரினச் சரணாலயமாக நெல்லை வன உயிரினச் சரணாலயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எங்குள்ளது : திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில், பெரியார் புலிகள் சரணாலயம், தேனி மாவட்டம் மேக மலை உள்ளிட்ட பகுதிகள் ஒட்டிய இடங்களில் நெல்லை வன உயிரினச் சரணாலயம் அமைந்துள்ளது.

இந்தப் பகுதியில் யானைகள், சிறுத்தை, மான்கள், சாம்பார் மான்கள், இந்தியக் காட்டு மாடுகள் ஆகியவை அதிகம் வசிக்கின்றன. மேலும், புலிகள் நடமாட்டமும் அடிக்கடி தென் படுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியது: நெல்லை வன உயிரினச் சரணாலயப் பகுதியில் சிவகிரி, வாசுதேவநல்லூர், திருமலைநாயக்கன் புதுக்குடி, கிருஷ்ணாபுரம், கடயநல்லூர், புலியாரை, குற்றாலம் வனப் பகுதிகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. கேரள - தமிழக எல்லையோரத்தில் ஒட்டியிருக்கும் இந்த வனப் பகுதி மிகவும் பசுமையானது. மேலும் இந்தப் புதிய பகுதியில் இந்தியப் பெரிய அணில் வகைகளையும் காணலாம். நெல்லை வன உயிரினச் சரணாலயத்தில் பழங்குடிகள் கிடையாது. எனவே, இது மனித கால்தடமே படாத பகுதி என்றும் கூறலாம். தமிழத்தை 22,877 சதுர கிலோ மீட்டர் தூரத்துக்கு வனப்புகுதிகள் உள்ளன. அதில் 2,948 சதுர கிலோ மீட்டர் காடுகள் அடர்ந்த காடுகளாகும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.